அகமதாபாத்: விஜய் ஹசாரே டிராபியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 426 ரன்களை குவித்து புதிய வரலாறு படைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் ஹாட்ரிக் சதம் விளாசி உச்சக்கட்ட ஃபார்மில் விளாசி வருவது பஞ்சாப் கிங்ஸ் அணி ரசிகர்களிடையே மிரள வைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மெகா ஏலத்திற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்ட 2 வீரர்களில் பிரப்சிம்ரன் சிங்கும் ஒருவர். சிறப்பாக ஆடி வரும் இவர், இந்திய ஏ அணியில் இடம்பிடித்து அசத்தி இருக்கிறார். இந்த நிலையில் விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் இவர், 5 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உட்பட 336 ரன்களை விளாசி இருந்தார்.

இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி இன்று விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இவர்கள் இருவரும் அதிரடியாக ரன்களை குவித்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 24 ஓவர்களில் 196 ரன்களை விளாசினர்.
சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 72 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் அபாரமாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தார். சிறப்பாக ஆடிய அவர் 105 பந்துகளில் 3 சிக்ஸ், 20 பவுண்டரி உட்பட 137 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் ஹசாரே தொடரில் பிரப்சிம்ரன் சிங் அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.
இதன் மூலமாக 6 இன்னிங்ஸில் விளையாடி 3 சதங்கள் உட்பட 473 ரன்களை குவித்துள்ளார். தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் ரமன்தீப் சிங் 53 பந்துகளில் 80 ரன்களை குவிக்க, பஞ்சாப் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 426 ரன்களை குவித்தது. இதன் மூலமாக விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப் அணி புதிய வரலாற்றை படைத்தது.
இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணியில் நிதேஷ் ரெட்டி மட்டும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 42 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய திதேஷ் ரெட்டி 87 பந்துகளில் 4 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 111 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் தனய் தியாகராஜன் அதிரடியாக 42 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியாக ஐதராபாத் அணி 47.5 ஓவர்களில் 346 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் பஞ்சாப் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. பிரப்சிம்ரன் சிங்கின் எழுச்சி காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் உற்சாகத்தை இருக்கிறது.