தரம்சாலா: தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான 58வது லீக் போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு என்ன காரணம் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. இந்த இடம் ஜம்மு காஷ்மீரிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் தற்போது பதற்றம் நிலவிவரும் நிலையில், போட்டி நடத்துவது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானது என கடந்த இரண்டு நாட்களாகவே பேசப்பட்டு வந்தது.

மே 11 அன்று தரம்சாலாவில் நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் மே 8 அன்று நடைபெற இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான இந்தப் போட்டியை மாற்றியமைப்பது கடைசி நேரத்தில் முடியாது என்பதால், இந்தப் போட்டி திட்டமிடப்பட்டபடி நடந்தது. மழையின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகவே போட்டி துவங்கியது.
சரியாக 10.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், போட்டி மின்விளக்குகள் சரியாக எரியாததால் தடைப்பட்டது. முதலில் ஒன்று அல்லது இரண்டு மின் விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாகச் செயலிழந்தன. அதைத் தொடர்ந்து வீரர்களும், அம்பயர்களும் மைதானத்தை விட்டு வெளியேறினர். அதன் பின்னர், பிசிசிஐ துணைத் தலைவர் அருண் துமால் மைதானத்தில் இருந்த ரசிகர்களைப் பார்த்து அனைவரும் வெளியேறுமாறு சைகை செய்தார். அதன் பின்னர் ரசிகர்கள் பாதுகாப்பாக மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அதன் பிறகு பிசிசிஐ, எதனால் போட்டி நிறுத்தப்பட்டது என விளக்கம் அளித்துள்ளது. பிசிசிஐ அளித்த விளக்கத்தின்படி, தரம்சாலா மைதானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் போட்டி நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மின்சார விநியோகம் தடைபட்டதால், மின்விளக்குகள் அந்த மைதானத்தில் வேலை செய்யவில்லை எனவும், இந்தத் தடங்கலுக்காக வருந்துவதாகவும் பிசிசிஐ தனது அறிவிப்பில் விளக்கம் அளித்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. முதல் விக்கெட்டுக்கு துவக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் 122 ரன்களைச் சேர்த்திருந்தனர். ஆர்யா 34 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தவுடன் இந்தப் போட்டி தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.