தரம்சாலா: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான 58வது லீக் போட்டி பாதுகாப்பு காரணங்கள் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தப் போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், புள்ளிப் பட்டியலில் இந்த இரு அணிகளுக்கும் எந்த புள்ளியும் வழங்கப்படவில்லை.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 10.1 ஓவரில் 122 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை இழந்திருந்தது. சரியாக அப்போது மைதானத்தில் மின்விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக அணைக்கப்பட்டன. வீரர்களும், ரசிகர்களும் மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மின்விளக்குகள் எரியாததாலும், தொழில்நுட்பப் பிரச்சனைகளாலும் போட்டி நிறுத்தப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது.

எனினும், நேற்று இரவு இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. அதனால் முன்னெச்சரிக்கையாக இந்தப் போட்டி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் போட்டியில் 10.1 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது.
இந்தப் போட்டி தொடர்ந்து மீண்டும் வேறு இடத்தில் வேறு நாளில் நடத்தப்படுமா? அல்லது போட்டி கைவிடப்பட்டதா? என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஒருவேளை போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
அந்த இரு அணிகளும் ஏற்கனவே மழையின் காரணமாக ஒரு போட்டி முடிவு இல்லாமல் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளி மட்டுமே பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கினால், பஞ்சாப் கிங்ஸ் அணி 12 போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளைப் பெற்றிருக்கும். டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 போட்டிகளின் முடிவில் 14 புள்ளிகளைப் பெற்றிருக்கும்.
தற்சமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளின் முடிவில் 15 புள்ளிகளுடனும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 போட்டிகளின் முடிவில் 13 புள்ளிகளுடனும் உள்ளன. பிசிசிஐ விரைவில் இந்தப் போட்டியின் முடிவு மற்றும் புள்ளிப் பட்டியல் குறித்து விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.