சிட்னி: 2025 ஐபிஎல் தொடரில் மே 8ஆம் தேதி அன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையேயான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு, மைதானத்தில் இருந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வேகமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது என்ன நடந்தது, அதன் பிறகு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் எப்படி டெல்லிக்குச் சென்றனர், அப்போது அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என மிட்செல் ஸ்டார்க்கின் மனைவியும், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனுமான அலிசா ஹீலி தெரிவித்துள்ளார். அதை இங்கே பார்க்கலாம்.
அலிசா ஹீலி கூறியிருப்பதாவது:
"அது அசாதாரண அனுபவமாக இருந்தது. திடீரென மைதானத்தில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. நாங்கள் அனைவரும் மேலே அமர்ந்துகொண்டு என்ன நடக்கிறது எனக் காத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு பெரிய குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய குழுவாக இருந்தோம். எங்களுடன் அணியின் உதவியாளர்களும் இருந்தனர்.

அப்போது எங்களை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்ற நபர் வேகமாக வந்தார். அவர் பேருந்தில் எங்களை வேகமாக ஏறுமாறு கூறினார். அவரது முகம் வெளிறிப் போய் இருந்தது. 'இப்போதே நாம் சென்றாக வேண்டும்' என்றார். அப்போது இன்னொரு நபரும் பரபரப்பாக வந்தார். அவர் எங்கள் குடும்பத்தினரைச் சேர்ந்த குழுவில் இருந்த ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டார். 'நாம் இப்போதே இந்த மைதானத்தை விட்டுச் செல்ல வேண்டும்' என்றார்.
நாங்கள் அனைவரும் என்ன நடக்கிறது என்று கேட்டோம், எங்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை என்று குழப்பத்தில் இருந்தோம். எங்களுக்கு எந்த யோசனையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒரே அறையில் ஒன்று திரட்டப்பட்டோம். அங்கு இடமே இல்லை. மிகுந்த நெருக்கடியுடன் நாங்கள் அங்கு நின்றோம். அப்போது இரு அணி வீரர்களும் அங்கே வந்தனர். ஃபாஃப் டு பிளெசிஸ் ஷூவைக்கூட அணியவில்லை. நாங்கள் அனைவரும் பதற்றத்துடன் இருந்தோம்.
மிட்செல் ஸ்டார்க்கிடம் நான் என்ன நடக்கிறது என்று கேட்டேன். அவர், '60 கிலோமீட்டர் தூரத்தில் சில ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. அந்த இடம் முழுவதும் மின்விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன' என்றார். அதனால்தான் தரம்சாலாவிலும் (போட்டி நடைபெற்ற இடம்) விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன என்று அவர் கூறினார். உடனடியாக நாங்கள் பரபரப்படைந்து வேன்களில் ஏறினோம். எங்கள் ஹோட்டல் அறைக்குச் சென்றோம். அது மிகவும் பைத்தியக்காரத்தனமாக இருந்தது.
அதன் பிறகு டெல்லிக்குச் செல்லும்போது நாங்கள் பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் சென்றோம். (வந்தே பாரத் ரயிலில் ஏறுவதற்காக பதான்கோட் சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தைக் கூறுகிறார்). அது எங்களுக்குப் பயத்தை அளிப்பதாக இருந்தது. மிட்செல் ஸ்டார்க் மற்றும் நான் 'கால் ஆஃப் டியூட்டி' விளையாட்டை விளையாடி இருக்கிறோம். எனவே, நாங்கள் ரேடார் மூலம் ஏவுகணைகள் வீசப்படுவதைக் காட்டும் சில இணையதளங்களைப் பார்த்தோம். அப்போது சில ஏவுகணைகள் அருகில் இருந்த சில சிறிய நகரங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம்.
அப்போது ஒரு கிராமத்தில் ஏதோ வெடித்ததைப் பார்த்து நாங்கள் பயந்து போனோம். நாங்கள் அனைவரும் அப்போது மதிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். திடீரென சிலர் 'அங்கே பாருங்கள்!' என்றார்கள். நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். வானத்தில் பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருந்தன. அது ஒரு திருமணமாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் ஒரு நல்ல திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இது (எங்களுக்கு) சரியான நேரமாக அமையவில்லை. அப்போது நாங்கள் அடைந்த அதிர்ச்சி மற்றும் பதற்றம் மிகவும் மோசமாக இருந்தது. நல்ல வேளையாக நாம் ஏவுகணையின் குறியாக இல்லை என்று மட்டும் நான் நினைத்துக்கொண்டேன்," என்று அலிசா ஹீலி கூறினார்.