அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையிலான ஆட்டம் ஒன்றில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தற்போது டி20 கிரிக்கெட்டில் 240 ரன்கள் அடித்தாலும் அதனை இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிகள் சேஸ் செய்கின்றன.
இதனால் ஒரு ரன்னை கூட வீணடிக்க கூடாது என்ற நோக்கில் ஒவ்வொரு அணிகளும் விளையாடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் சில பிரபல வீரர்கள் தனிப்பட்ட சாதனைகளுக்காக சில விஷயங்களை செய்வார்கள்.

குறிப்பாக ஓவர்கள் முடியும் நிலையில் ஒரு வீரர் சதத்தை நெருங்குகிறார் என்றால் எதிரில் இருக்கும் வீரர் அவருக்கு சிங்கிள்ஸ் வழங்கி சதம் அடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவார். சில சமயம் சதத்தை நெருங்கும் வீரர் டபுள்ஸ் போடாமல் சிங்கிள்ஸ் மட்டும் எடுத்து அடுத்த பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பை உறுதி செய்து சதம் அடிப்பார்கள்.
ஒருமுறை விராட் கோலி இவ்வாறு செய்து மிகப் பெரிய சர்ச்சை உண்டானது. இந்த சூழலில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்பதை உணர்ந்து அணிக்காக தன்னுடைய சதத்தை தியாகம் செய்தார். 19 ஆவது ஓவர் முடிவில் ஸ்ரேயாஸ் 42 பந்துகள் எதிர்கொண்டு 97 ரன்கள் சேர்த்தார். எனினும் கடைசி ஓவரை ஷசாங் எதிர்கொண்ட போது ஸ்ரேயாஸ் அவரிடம் சென்று பேசினார்.
இதனால் கடைசி ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடிக்கவே பார்த்தாரே தவிர ஸ்ரேயாஸ் சிங்கிள்ஸ் தரவில்லை. இந்த நிலையில் தான் ஏன் ஸ்ரேயாஸ்க்கு சிங்கிள்ஸ் தரவில்லை என்பது குறித்து ஷசாங் அளித்துள்ள பேட்டி தான் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இது குறித்து பேசிய அவர், கடைசி ஓவரில் முதல் பந்து முன் ஸ்ரேயாஸ் என்னிடம் வந்து என்னுடைய சதத்தைப் பற்றி நீ கவலைப்படாதே.
எனக்கு சிங்கிள்ஸ் வேண்டாம். உன்னால் முடிந்தவரை பெரிய சாட் ஆடி ரன்களை சேரு என்று கூறினார். பந்தை பார்த்து அதற்கு ஏற்ற சாட்டை விளையாடியதன் மூலம் பௌண்டரிகளை எடுத்தேன். ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த பேச்சு எனக்கு உத்வேகத்தை கொடுத்தது என்று ஷசாங் கூறினார். ஸ்ரேயாஸ் தம்மிடம் வந்து சிங்கிள்ஸ் வேண்டாம். அடித்து ஆடு என்று கூறினார் என ஷசாங் பேசியிருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் என்றால் இப்படி சுயநலம் இன்றி விளையாட வேண்டும் என பலரும் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டி வருகின்றனர்.