முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்ததைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை விட மோசமாக விளையாடியதாக கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 112 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எளிதாக எட்டி விடும் என்று அனைவரும் எண்ணினர். மேலும் 9.1 ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 71 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது.

இன்னும் 7 விக்கெட்கள் கையில் இருந்ததால் நிச்சயமாக அந்த அணி மீதமுள்ள ரன்களையும் எளிதாக எட்டி விடும் என்று அனைவரும் நம்பினர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அடுத்த சில ஓவர்களிலேயே விக்கெட்கள் மளமளவென சரியத் தொடங்கின. இறுதியில் 15.1 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆல் அவுட் ஆனது.
16 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்து அதிர்ச்சி அளித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கடைசி 24 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்களையும் இழந்திருந்தது அந்த அணி. இது போன்ற விக்கெட் வீழ்ச்சியெல்லாம் நாம் அடிக்கடி பாகிஸ்தான் அணியில் பார்க்க முடியும்.
சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பாகிஸ்தான் அணி இது போன்ற நிகழ்வுகளை சந்தித்து இருந்தது. கிட்டத்தட்ட பாகிஸ்தானைப் போலத்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆடியிருக்கிறது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த அணியை விமர்சித்து வருகின்றனர். இத்தனைக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இம்பாக்ட் பிளேயரையும் சேர்த்து மொத்தம் எட்டு பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அப்படி இருந்தும் இந்த விக்கெட் வீழ்ச்சியை அந்த அணி சந்தித்து இருக்கிறது.
இந்த போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். "சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எங்கள் அணியின் முயற்சியின் மீது மிகப்பெரிய ஏமாற்றத்துடன் இருக்கிறேன். இந்த தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் தவறான ஷாட்டை ஆடினேன். எங்கள் பந்துவீச்சாளர்கள் இந்த ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். வலுவான பஞ்சாப் பேட்டிங் வரிசையை 111 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தார்கள்" என்று சொன்னார்.