லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணி தங்களுடைய முதல் சொந்த ஊர் ஆட்டத்தை விளையாடியது. இதில் பஞ்சாப் அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வியை தழுவி இருக்கிறது.
172 ரன்கள் என்று இலக்கை 16 புள்ளி இரண்டாவது ஓவரிலேயே பஞ்சாப் கிங்ஸ் அணி சேஸ் செய்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தோல்விக்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார்.

இதில், இன்று நாங்கள் அடித்த ரன்கள் போதுமானதாக இல்லை. குறைந்தபட்சம் 20 முதல் 25 ரன்கள் நாங்கள் கம்மியாக அடித்து விட்டோம். ஆனால் இது போன்ற ஒரு போட்டி விளையாட்டில் அங்கமாக தான் அமையும். இது எங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் முதல் போட்டி ஆகும். ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாங்கள் கணித்து வருகின்றோம்.
நாங்கள் ஆரம்ப கட்டத்தில் சில விக்கெட்டுகளை இழந்து விட்டோம். பவர் பிளேவில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெரிய இலக்கை எட்டுவது என்பது மிகவும் சிரமமான விஷயம். ஆனால் அனைத்து விஷயத்தையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு வீரர்களும் போட்டியில் முன்னோக்கி செல்ல தான் முயற்சி செய்கின்றோம்.
நாங்கள் இன்றைய போட்டிக்கு தோய்வான ஆடுகளத்தை பயன்படுத்த திட்டமிட்டு இதன் மூலம் பந்து கொஞ்சம் நின்று பேட்டிற்கு வரும். இதனால் பந்தை மெதுவாக வீசி விக்கெட்டு களை எடுக்க நாங்கள் திட்டம் போட்டோம். ஆனால் எங்களுடைய திட்டம் இன்று சரியாக செயல்படவில்லை.
இந்த போட்டியில் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு அடுத்த போட்டியை நோக்கி செல்கின்றோம். இந்த போட்டியிலும் எங்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இது தொடரின் மிகவும் ஆரம்பமான கட்டம்தான். நாங்கள் இன்னும் பல விஷயங்கள் குறித்து ஆராய்ந்து அணியில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை பார்த்து வருகின்றோம். இதிலிருந்து மீண்டு நாங்கள் வெற்றிகரமான அணியாக மாறுவோம் என்று நம்புகிறேன் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.