ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 59வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப் பரிட்சை நடத்தியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய தொடக்க வீரர் பிரியன்ஸ் ஆர்யா 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அறிமுக வீரரான மிட்செல் ஓவன் டக் அவுட் ஆனார். எனினும் பிராப்சிம்ரன் சிங் 10 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். இதில் மூன்று பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பௌண்டரிகள் அடங்கும்.

ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வீரர்கள் சரிவை நோக்கி சென்ற நிலையில் களத்தில் சேர்ந்த நெஹல் வதேரா மற்றும் பிராப்சிம்ரன் சிங் ஆகியோர் அதிரடி காட்டினர். குறிப்பாக நெஹல் வதேரா ராஜஸ்தான் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார். 25 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் தொடர்ந்து பெரிய ஷாட்களை ஆடினார்.
ஐந்து பவுண்டரி, 5 சிக்சர் என 37 பந்துகளில் அவர் 70 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் ஷசாங் சிங் தனது வழக்கமான அதிரடி காட்டி 27 பந்துகளில் அரை சதம் கடந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 30 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பௌண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் அஸ்மதுல்லாஹ் ஓமர்சாய் ஒன்பது பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.
இதில் மூன்று பவுண்டரில் ஒரு சிக்சர் அடங்கும். இதன் காரணமாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் பந்துவீச்சு தரப்பில் துஷார் தேஷ் பாண்டே அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பஞ்சாப் அணி 34 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் குறைவான ஸ்கோரே எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் நடுவரிசை வீரர்கள் அதிரடி காட்டி சவாலான இலக்கை ராஜஸ்தானுக்கு அளித்திருக்கிறார்கள்.