கொல்கத்தா: ஆர்சிபி அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடி தொடக்க வீரரான பில் சால்ட் அபாரமாக விளையாடி 25 பந்துகளில் அரைசதம் விளாசி இருக்கிறார். தனது பழைய அணியான கேகேஆர் அணிக்கு எதிரான அரைசதம் விளாசியதன் மூலமாக, தன்னை ரீடெய்ன் செய்யாமல் விட்டது தவறு என்பதையும் நிரூபித்து காட்டி இருக்கிறார்.
18வது ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை விளாசியது. ஆர்சிபி அணி தரப்பில் க்ருணால் பாண்டியா 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனைத் தொடர்ந்து சவாலான இலக்கை நோக்கி ஆர்சிபி அணி தரப்பில் பில் சால்ட் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கடந்த சீசனில் கேகேஆர் அணிக்காக ஆடிய பில் சால்ட், இம்முறை ஆர்சிபி அணிக்காக களமிறங்கியுள்ளார். இதனால் தனது பழைய அணிக்கு எதிராக எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மட்டும் 7 போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களை விளாசி இருந்தார். இதனால் பில் சால்ட் மரண ஆட்டம் ஆடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்ப வைபவ் அரோரா வீசிய முதல் பந்திலேயே பில் சால்ட் பவுண்டரியுடன் தொடங்கினார். தொடர்ந்து சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார்.
இதனால் பில் சால்ட் - விராட் கோலியை கட்டுப்படுத்த கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே உடனடியாக வருண் சக்கரவர்த்தி கைகளில் பந்தை கொடுத்தார். ஆனால் அந்த ஓவரில் 4, 6, 4, 4 என்று 21 ரன்களை விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய அவர் 25 பந்துகளில் அரைசதத்தை விளாசி அசத்தினார். ஐபிஎல் தொடரின் பில் சால்ட் அடிக்கும் 7வது அரைசதம் இதுவாகும்.
சிறப்பாக ஆடிய அவர் 31 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆர்சிபி அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே பில் சால்ட் அரைசதம் அடித்திருப்பது அந்த அணி ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் பில் சால்ட் ஸ்டான்ஸ், அவரின் பேட் லிஃப்ட் உள்ளிட்டவை அப்படியே டூ பிளசிஸ் ஆட்டத்தை நினைவுபடுத்துவது போல் அமைந்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.