ஜெய்ப்பூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே பரவாயில்லை என சொல்லும் அளவுக்கு விளையாடி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் ஆறு பந்துகளில் ஒன்பது ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சொதப்பி தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இதன் மூலம் 8 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஆறு தோல்விகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுமோசமான நிலையில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மிகக் கடினமான விஷயமாக மாறியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 16 புள்ளிகள் எடுத்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு உறுதியாகச் சென்றுள்ளன. 14 புள்ளிகளை எடுத்த அணிகள் நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு சில சமயம் முன்னேறியுள்ளன.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு வெற்றிகளுடன் நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ளன. அந்த அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் கூடுதலாக 12 புள்ளிகளைப் பெற்று மொத்தம் 16 புள்ளிகளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற முடியும். அப்போதுதான் உறுதியாக பிளே ஆஃபிற்கு முன்னேற முடியும்.
ஒருவேளை 14 புள்ளிகளைப் பெற வேண்டும் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அந்த அணிக்கு மீதமுள்ள 6 போட்டிகளில் ஐந்து வெற்றிகள் தேவை. இதுவும் மிகக் கடினமான விஷயம் தான். எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. அந்த அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும், அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு முடிவுக்கு வந்ததாக நாம் உறுதியாகச் சொல்லலாம்.
ஏனெனில், தற்போது முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் தலா 10 புள்ளிகளைப் பெற்றுவிட்டன. அந்த அணிகள் இன்னும் தலா மூன்று போட்டிகளில் வென்றால் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். எனவே, இந்த ஆண்டு நிச்சயம் பெரும்பாலான அணிகள் 16 புள்ளிகளைப் பெற்றுத்தான் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் என்ற கணிப்பு உள்ளது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தற்போது 7 போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த அணி இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிலைதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஏற்படும்.