தரம்சாலா: தரம்சாலாவில் இருந்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்கச் சென்றிருந்த வீரர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவினர் உள்ளிட்ட சுமார் 300 பேரை வந்தே பாரத் ரயில் மூலம் ஐபிஎல் நிர்வாகம் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளது. அவர்கள் அனைவரும் தரம்சாலாவிலிருந்து டெல்லிக்குச் சென்றுள்ளனர்.
2025 ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டியான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி, தொடங்கி 10.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி 10.1 ஓவர் வரை பேட்டிங் செய்திருந்த நிலையில், மைதானத்தில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.

அதன் பின் வீரர்களும், அம்பயர்களும் ஆடுகளத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து அந்த மைதானத்தில் நிரம்பி இருந்த ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அங்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் போட்டி நிறுத்தப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது.
ஆனால் அருகே இருந்த ஜம்மு மற்றும் பதான்கோட் நகரங்களில் பாகிஸ்தான் குறி வைத்து தாக்குதல் நடத்த இருந்ததாகவும், அதை இந்திய ராணுவம் தடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்தப் போட்டி முன்னெச்சரிக்கையாக பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்த இரு அணி வீரர்கள், போட்டியை ஒளிபரப்ப வந்த தொழில்நுட்ப குழுவினர், வர்ணனையாளர்கள், சியர் லீடர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என சுமார் 300 பேர் தரம்சாலாவில் இருந்து எப்படி வெளியேறப் போகின்றனர் என்று கேள்வி இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் நிர்வாகம் அவர்களுக்கு என சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது.
தரம்சாலாவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டு இருந்த நிலையில், அங்கிருந்து ஐபிஎல்-இல் பங்கேற்க வந்த 300 பேரும் வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லிக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர். ரயிலில் அனைத்து விதமான வசதிகளோடு இருக்கும் என்பதோடு, வேகமாக செல்லக்கூடியது என்பதால் வந்தே பாரத் ரயில் மூலம் ஐபிஎல் நிர்வாகம் வீரர்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளது.
இந்தப் போட்டியின் முடிவு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இரு அணிக்கும் ஒரு புள்ளி வழங்கப்படுமா அல்லது போட்டி மீண்டும் வேறு இடத்தில் நடத்தப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. இது ஒரு புறம் இருக்க, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் அளித்து இருக்கிறார்.