கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து அந்த அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இனி அந்த அணி எப்படி முன்னேற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளின் தற்போதைய நிலை என்ன? அந்த அணிகள் எப்படி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது பற்றி பார்க்கலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அந்த அணி எட்டு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி உறுதியாக பிளே ஆஃபிற்கு முன்னேற வேண்டும் என்றால், மீதமுள்ள ஆறு லீக் போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பெற வேண்டும். அதன் மூலம் அந்த அணி லீக் சுற்று முடிவில் 16 புள்ளிகளைப் பெற்றிருக்கும். 16 புள்ளிகளைப் பெறும் அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு மிகவும் அதிகம் என்பதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது எட்டு போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணிக்கு மீதம் இருக்கும் ஆறு போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்றால், 16 புள்ளிகளுடன் அந்த அணியும் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே படுமோசமான நிலையில் ஒரே நிலையில் தான் உள்ளன. இந்த இரண்டு அணிகளும் 8 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளன. இந்த இரண்டு அணிகளுக்கும் ஆறு லீக் போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், அவற்றில் ஒரு தோல்வி கூட சந்திக்காமல் ஆறு வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே 16 புள்ளிகளைப் பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த இரண்டு அணிகளும் அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அந்த அணி ஏழு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணி மீதமுள்ள ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்:
குஜராத் டைட்டன்ஸ் அணி எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்று தற்போது 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இன்னும் இரண்டு வெற்றிகளைப் பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும்.
டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:
டெல்லி கேப்பிடல்ஸ் அணி மீதமுள்ள ஏழு போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மீதமிருக்கும் ஆறு போட்டிகளிலும் தலா மூன்று வெற்றிகளைப் பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த 4 அணிகளும் தற்போது தலா 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது முதல் ஐந்தாவது இடம் வரை இடம் பெற்றுள்ளன.