டெல்லி: 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிட்டத்தட்ட இழக்கும் நிலையில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அதே நிலைதான் உள்ளது. நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்தது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 5 தோல்விகளை சந்தித்து இருக்கிறது, இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 7 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது.

இந்த இரண்டு அணிகளும் ஏழு போட்டிகளில் விளையாடியதற்குப் பிறகு நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்று உள்ளன. 2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் தற்போது எட்டாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது இடத்திலும் உள்ளன.
ஒன்பதாவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு போட்டிகளில் தான் விளையாடி உள்ளது. எனவே அந்த அணியை நீக்கிவிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இனி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பார்க்கலாம்.
இதுவரை நடந்த 17 ஐபிஎல் தொடர்களில் 16 புள்ளிகளைப் பெற்ற அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இடம் பெறுவது உறுதியாக நடந்துள்ளது. அதே சமயம் 14 புள்ளிகளைப் பெற்ற அணிகள் மற்ற அணிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் போட்டியிட்டால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 16 புள்ளிகள் பெற்றால் தான் உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.
அந்த வகையில் பார்த்தால் இந்த இரண்டு அணிகளுக்கும் இன்னும் ஏழு போட்டிகள் மீதம் உள்ளன. அந்த ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றால் தான் 16 புள்ளிகளை புள்ளிப் பட்டியலில் எட்ட முடியும். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மிக மோசமாக விளையாடி வரும் நிலையில், அடுத்து வரும் ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெறுவது சாத்தியமா? என்ற கேள்வி உள்ளது.
இன்னும் இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தோல்வி அடைந்தால் நிலைமை சிக்கல் ஆகிவிடும். தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி உள்ளது. அந்த அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி, அதில் ஐந்து வெற்றிகளைப் பெற்று உள்ளது. அதன் மூலம் 10 புள்ளிகளை பெற்று இருக்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. அந்த அணி இன்னும் மூன்று வெற்றிகளைப் பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும்.