கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியுடன் மொத்தம் 57 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. சுமார் மூன்றில் இரண்டு பகுதி லீக் போட்டிகள் நடந்து முடிந்து இருக்கின்றன. இதன் முடிவில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளன என்பது பற்றிப் பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியும் 11 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்று மொத்தம் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் எல்லாம் 16 புள்ளிகளைப் பெற்ற அணிகள் அனைத்துமே ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு நேரடியாக முன்னேறி இருக்கின்றன. இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது. எனினும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது. அந்த அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதம் உள்ளன. அதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடலாம்.

இதே நிலைதான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் உள்ளது. அந்த அணியும் 11 போட்டிகளில் 8 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் சந்தித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியை விட நெட் ரன் ரேட் அடிப்படையில் மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பின்தங்கி உள்ளது. அந்த அணி தனது கடைசி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தனக்கு மீதமுள்ள 3 போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை 100 சதவீதம் உறுதி செய்துவிடலாம்.
மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளைச் சந்தித்துள்ளது. ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணி தனக்கு மீதமுள்ள 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்றால் நூறு சதவீதம் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடலாம். எனினும் இன்னும் ஒரு வெற்றி பெற்றாலும் கூட அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
நெட் ரன் ரேட்டை பஞ்சாப் கிங்ஸ் அதிக அளவில் வைத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அடுத்து மீதமுள்ள 3 போட்டிகளில் அந்த அணி ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் தோல்வி அடைந்தாலும் அவை படுமோசமான தோல்விகளாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நெட் ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் முன்னிலை பெற முடியும்.
நான்காவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணி தனக்கு மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றால் தான் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும். சவால் நிறைந்த இப்போதைய நிலைதான். அந்த அணி அடுத்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. அந்த இரண்டு போட்டிகளில் விளையாட உள்ள அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளன. எனவே, அந்த அணிகளை வீழ்த்துவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமாகும்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 போட்டிகளில் 6 வெற்றிகள் 4 தோல்விகளுடன் 13 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. மழையின் காரணமாக ஒரு போட்டி கைவிடப்பட்டது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பின்னடைவாக உள்ளது. தற்போது அந்த அணி தனக்கு மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற வேண்டும். ஆனால் மூன்று போட்டிகளிலும் வென்றால் தான் பிலே ஆஃப் வாய்ப்பை நூறு சதவீதம் உறுதி செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிலைமை கவலைக்கிடமாக மாறி உள்ளது. அந்த அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக தான் விளையாடிய கடைசி போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. அதன் 12 போட்டிகளில் 5 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளுடன் 11 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. அந்த அணி தனக்கு மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றாலும் அதிகபட்சம் 15 புள்ளிகளை தான் பெற முடியும். இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 16 புள்ளிகளை பெற்றுவிடும் என்ற நிலை இருப்பதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமே.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் முதலில் பிளேயர் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அந்த அணியின் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. 11 போட்டிகளில் ஐந்து வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்ற அந்த அணி ஏழாவது இடத்தில் உள்ளது. 3 போட்டிகள் மீதம் உள்ளன. அந்த மூன்றிலும் வெற்றி பெற்றால் அதிகபட்ச 16 புள்ளிகளைப் பெற முடியும்.
அத்துடன் அதிக நெட் ரன் ரேட்டையும் பெற்றால், அந்த அணி நான்காவது இடத்தில் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு சிறிய வாய்ப்பு உள்ளது. ஆனால் அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்த வேண்டும். அது அந்த அணிக்கு மிகவும் சவாலான விஷயமாகவே இருக்கும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளைச் சந்தித்து 7 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. எனினும் அந்த அணி அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளை வீழ்த்தினால் அந்த அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பைப் பறிக்க முடியும்.
கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 12 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று தலா 6 புள்ளிகளுடன் 9 மற்றும் 10வது இடங்களில் உள்ளன. இந்த இரண்டு அணிகளும் அடுத்து விளையாட உள்ளன. அதில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதை தவிர இந்த இரண்டு அணிகளுக்கும் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை.