முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்றுப் போட்டி இன்று முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இப்போட்டி பஞ்சாப் மாநிலத்தின் முல்லான்பூரில் நடைபெற உள்ள நிலையில், அங்கு காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
மேலும், அந்த மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசரகால பயிற்சிகளையும் காவல்துறையினர் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறிதளவு பதற்றம் நிலவி வருகிறது. எனினும், காவல்துறையினர் தாங்கள் முன்னேற்பாடாகவே இந்த விஷயங்களைச் செய்து வருவதாக விளக்கம் அளித்துள்ளனர்.

2025 ஐபிஎல் தொடரின் இடையே இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவியது. அப்போது தரம்சாலாவில் நடைபெற்று வந்த போட்டியின்போது, அருகாமை நகரமான பதான்கோட்டில் பாகிஸ்தானின் ஏவுகணை வீசப்பட்டதாகப் பதற்றம் ஏற்பட்டது. அப்போது எந்த அசம்பாவிதமும் நேராத நிலையிலும், போட்டிப் பாதியில் நிறுத்தப்பட்டது. அத்துடன், சுமார் பத்து நாட்களுக்கு ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
மீண்டும் ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட நிலையில், தற்போது பிளே ஆஃப் சுற்று நடைபெற உள்ளது. பிளே ஆஃப் சுற்றின்போது பஞ்சாப் மாநிலம் மற்றும் அருகாமை நகரங்களில் எங்கும் ஐபிஎல் லீக் போட்டிகள் நடத்தப்படவில்லை. எனினும், பிளேஆஃப் போட்டி பஞ்சாப் மாநிலத்தின் முல்லான்பூரில் நடைபெற உள்ளது. போர்ப் பதற்றத்தின்போது ஏற்பட்ட நிகழ்வுகளை மனதில் வைத்து காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விளக்கம் அளித்துள்ளது.
முதல் தகுதிச்சுற்றுப் போட்டி முடிந்தவுடன், அதற்கு மறுநாள் எலிமினேட்டர் போட்டியும் இதே முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு முக்கிய ஐபிஎல் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளதால், தாங்கள் ரசிகர்களை ஒழுங்குபடுத்தி போட்டிகளை அமைதியான முறையில் நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருவதாக பஞ்சாப் மாநில டிஜிபி கூறி உள்ளார்.
மேலும், 65 காவல்துறை அதிகாரிகளும் 2500க்கும் மேற்பட்ட காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கண்டிப்புடன் இருக்கும் எனவும் டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியும், ஐபிஎல் இறுதிப் போட்டியும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.