முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டி முல்லான்பூரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறும் எனப் பலரும் கணித்து வருகின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பது பலரின் சந்தேகமாக இருக்கிறது. ஜோஸ் ஹேசில்வுட் விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகமும் உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்றுவிட்டால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
இது முதல் தகுதிச்சுற்றுப் போட்டி என்னும் நிலையில், இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். ஐபிஎல் லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தான் பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாட முடியும்.

அதன்படி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தற்போது முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளன.
இதில் தோல்வி அடையும் அணி அடுத்து இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெறும். புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளுக்கு மட்டுமே இந்த இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும். புள்ளிப் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்து எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். அதில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்த அணியைச் சந்திக்கும். ஒருவேளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்தால், அடுத்து இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாடும். அதில் வென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் தகுதிச்சுற்றுப் போட்டியிலேயே வீழ்த்திவிட்டால், நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.