தரம்சாலா: பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் இளம் அதிரடி பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங், தோனி இளம் வயதில் விளையாடுவதைப் போலவே அதிரடியாக விளையாடுவதாக முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மேத்யூ ஹேடன் பாராட்டியிருக்கிறார்.
நேற்று நடந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக பிரப்சிம்ரன் சிங் 48 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்தார். 7 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடித்திருந்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை அவர் பந்தாடிய விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. அதற்கு பிரப்சிம்ரன் சிங் துவக்கம் முதலே ஆடிய அதிரடி ஆட்டம் தான் முக்கிய காரணமாக அமைந்தது.

இது பற்றிப் பேசிய மேத்யூ ஹேடன் 2010 ஆம் ஆண்டு தோனி தன்னுடன் எப்படி பேட்டிங் ஆடினாரோ, அப்போது எப்படி சிக்ஸ் அடித்தாரோ, அதேபோலவே பிரப்சிம்ரன் சிங் இப்போது விளையாடி வருவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். "அவருக்கு (பிரப்சிம்ரனுக்கு) அபாரமான சக்தி இருக்கிறது. 2010-ஆம் ஆண்டு, இளம் தோனி ஒருவர் நாள் முடிவில் பந்துகளை சிக்ஸருக்கு பறக்க விட்டுக் கொண்டிருந்தார்."
"பிரப்சிம்ரனிடமும் அதேபோன்ற குணாதிசயங்கள் உள்ளன. அவரிடம் அற்புதமான பேட் வேகம், உறுதியான அடித்தளம் இருக்கிறது. அவர் அவ்வளவு உயரம் இல்லை என்பதால், பந்தை இடைவெளிகளில் எளிதாக திருப்பி விட முடியும், மேலும் அவர் பயமற்றவர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான பந்துகளை அவர் எதிர்கொண்ட விதத்தைப் பார்த்தாலே தெரியும். அவர் முழு கட்டுப்பாட்டில் இருந்தார். பந்துவீச்சாளர்களை தவறுகள் செய்ய அவர் கட்டாயப்படுத்தினார்" என்று மேத்யூ ஹேடன் கூறினார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரப்சிம்ரன் சிங் இந்த ஆண்டு சீராக விளையாடி வருகிறார். இதுவரை 11 போட்டிகளில் 437 ரன்கள் குவித்துள்ளார். லீக் சுற்றில் இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அவர் இந்த சீசனை ஒரு சிறப்பான முடிவோடு முடிக்க முனைப்புக் காட்டுவார்.