ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அம்பயர் எடுத்த சிக்ஸ் முடிவு ஒன்று சர்ச்சையாக மாறி உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
பவுண்டரி எல்லை அருகே பந்தைக் கேட்ச் பிடிக்க முயன்ற கருண் நாயர், அந்தப் பந்து சிக்ஸ் எனக் கூறிய நிலையில், மூன்றாவது அம்பயர் அது சிக்ஸ் இல்லை என அறிவித்தார். அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதை சுட்டிக்காட்டித்தான் பிரீத்தி ஜிந்தா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

"கேட்ச் பிடிக்க முயன்ற ஃபீல்டரே சிக்ஸ் என்று சொல்லும்போது, எப்படி மூன்றாவது அம்பயர் தவறான தீர்ப்பை அளித்தார்?. இத்தனை தொழில்நுட்பங்கள் இருக்கும் போது இது போன்ற தவறுகள் நடப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது" என பிரீத்தி ஜிந்தா தனது ஆதங்கத்தைக் கூறியிருக்கிறார்.
ஆனால், உண்மையில் அந்தப் பந்து சிக்ஸ் இல்லை என பலமுறை ரீப்ளே செய்து பார்த்த பின்னரே மூன்றாவது அம்பயர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 15-வது ஓவரின் கடைசிப் பந்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷஷாங் சிங் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்றார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஃபீல்டர் கருண் நாயர் பவுண்டரி எல்லை அருகே அந்த சிக்ஸரை கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால், பந்தை தவறவிட்டார். இருப்பினும், அது சிக்ஸ் என அவர் சைகை செய்தார். எனினும், மூன்றாவது அம்பயர் அதை பரிசோதித்து, கருண் நாயர் பந்தைப் பிடிக்க முயன்றபோது அவரது கால் பவுண்டரி எல்லையில் படவில்லை என அறிவித்தார்.
கருண் நாயர் தான் பந்தைக் கேட்ச் பிடிக்க முயன்றபோது தனது கால்கள் பவுண்டரி எல்லையில் பட்டுவிட்டதாக நினைத்திருக்கலாம். அதனால்தான் அவர் சிக்ஸ் என சைகை செய்தார் என பின்னர் விமர்சகர்கள் இதற்கு விளக்கம் அளித்தனர். எனினும், கருண் செய்த சைகையால் இந்த சர்ச்சை எழுந்தது. பிரீத்தி ஜிந்தா இது பற்றி வெளியிட்டுள்ள பதிவில், தான் போட்டிக்குப் பிறகு கருண் நாயரிடம் பேசியதாகவும், அவரும் அது சிக்ஸ் தான் எனக் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.