மும்பை: பிரித்வி ஷா மற்றும் மும்பை கிரிக்கெட் அமைப்புக்கு இடையேயான மோதல் உச்சத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் மும்பை கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் பிரித்வி ஷாவை மும்பை அணியில் இருந்து நீக்கியது பற்றி பேசி இருந்தார்.
அப்போது பிரித்வி ஷா பயிற்சிக்கு வராமல் காலை 6 மணி வரை பார்ட்டியில் பங்கேற்றது குறித்து கூறி இருந்தார். அந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், அந்த அதிகாரி நடந்தவற்றை அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசி இருப்பதாக மறைமுகமாக சாடி இருக்கிறார் பிரித்வி ஷா.

பிரித்வி ஷா தனது உடற்தகுதியை சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டாலும், ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டாலும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். அதன் பின் அவர் ஐபிஎல் தொடரிலும், மும்பை அணிக்காகவும் மட்டுமே ஆடி வந்தார்.
2025 ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் அவரை புறக்கணித்து விட்டன. அவரது நடவடிக்கைகள் குறித்து மும்பை அணியிலும் புகைச்சல் எழுந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த 2024 சையது முஷ்டாக் அலி ட்ராபி டி20 தொடரில் பிரித்வி ஷா சரியாக விளையாடவில்லை. மேலும், அவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மும்பை கிரிக்கெட் அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றிற்கு தனது பெயரை குறிப்பிடாமல் பேட்டி அளித்து இருந்தார்.
அந்த பேட்டியில், பிரித்வி ஷா பயிற்சிக்கு வராமல் இரவு நேர பார்ட்டியில் பங்கேற்று விட்டு அடுத்த நாள் காலை 6 மணிக்கு வந்ததாக குறிப்பிட்டு இருந்தார். மேலும், மும்பை அணியில் இடம் பெற்றுள்ள மூத்த வீரர்களும் பிரித்வி ஷாவின் அணுகுமுறை பற்றி புகார் சொல்ல தொடங்கியதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் வேகமாக பரவிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரித்வி ஷா ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியாவிட்டால் அதை பற்றி பேசாதீர்கள். இங்கு நிறைய மக்கள் அரைகுறையான விஷயங்களை வைத்துக் கொண்டு முழு அளவில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்." என குறிப்பிட்டு இருக்கிறார். இதை அடுத்து பிரித்வி ஷா மற்றும் மும்பை கிரிக்கெட் அமைப்புக்கு இடையேயான மோதல் உச்சத்தை எட்டி இருக்கிறது.