மும்பை: பிரித்வி ஷாவுக்கு குழந்தையை போல் யாரும் அருகிலேயே இருந்து சொல்லி கொடுக்க முடியாது என்று மும்பை அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவுறுத்தியுள்ளார். கிரிக்கெட்டுக்கான ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், தவறு எங்கு நடக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும் என்று பிரித்வி ஷாவிற்கு அட்வைஸ் செய்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணிக்காக விளையாடிய இளம் வீரரான பிரித்வி ஷாவை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. ரூ.75 லட்சம் மட்டுமே அடிப்படை விலையாக நிர்ணயித்த போது, பிரித்வி ஷாவை யாரும் வாங்காதது ரசிகர்களிடையே மிகப்பெரிய விவாதமாக மாறியது. இதன்பின் உலகம் முழுவதும் உள்ள முன்னாள் வீரர்களில் இருந்து பிரித்வி ஷாவுக்கு பல்வேறு அட்வைஸ் வந்தது.

இதன்பின் சையத் முஷ்டாக் அலி தொடரிலும் பிரித்வி ஷாவுக்கு மும்பை அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ரன்களை குவித்து ஐபிஎல் உரிமையாளர்களுக்கு பதிலடி கொடுப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை அணிக்காக 9 போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா, ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாகவே 197 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.
இதனால் மீண்டும் பிரித்வி ஷா மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மும்பை அணியை வழிநடத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், பிரித்வி ஷா கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மற்ற யாரிடமும் இல்லாத அளவிற்கு பிரித்வி ஷாவிடம் திறமைகள் உள்ளது. ஆனால் பிரித்வி ஷா தனது சில விஷயங்களில் முன்னேற வேண்டிய தேவை உள்ளது.
கிரிக்கெட் விளையாடினால், அதற்கு தயாராகுவதற்கு என்று சில நெறிமுறைகள் உள்ளன. அதனை இன்னும் கட்டுக்கோப்புடன் பின்பற்ற வேண்டும். அதனை சரியாக செய்தால், பிரித்வி ஷாவிற்கு அந்த வானம் மட்டுமே எல்லையாக இருக்கும். அவ்வளவு சாதனைகளை பிரித்வி ஷா படைப்பார். யாருக்கும் குழந்தையை போல் அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது.
பிரித்வி ஷா ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவிட்டார். அவருக்கு அனைவரும் தங்களின் ஆலோசனைகளை கூறியுள்ளனர். யார் என்ன சொன்னாலும், அவர் தனது பணியை எவ்வாறு செய்யலாம் என்று கண்டறிய வேண்டும். ஏற்கனவே கடந்த காலங்களில் ஃபார்மின்றி தவித்த போது, பிரித்வி ஷா எப்படி கம்பேக் கொடுக்க வேண்டும் என்று கண்டறிந்திருக்கிறார்.
அதனால் அவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை. ஆனால் கவனம் கிரிக்கெட்டில் மட்டுமே இருக்க வேண்டும். தனியாக அமர்ந்து, எங்கே தவறு நடக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். அப்படி செய்தாலே, தவறு எங்கு நடக்கிறது என்பதற்கான பதில் கிடைத்துவிடும். அவர் இதனை மட்டுமே செய்ய வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.