ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்து இருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கேவுக்கு எதிராக பெற்ற வெற்றியின் உத்வேகத்தில் இருந்த பஞ்சாப் அணி இன்றும் அதிரடியாக விளையாடியது. சிஎஸ்கேவுக்கு எதிராக 39 பந்துகளில் சதம் அடித்த பிரியான்ஸ் ஆர்யா இன்றும் தனது அதிரடியை காட்டினார். நான்கு சிக்ஸர் ,இரண்டு பவுண்டரி என 13 பந்துகளில் அவர் 36 ரன்கள் எடுத்தார்.

இதை போன்று பிராப்சிம்ரன் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் இன்று பட்டையை கிளப்பினார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் தெறிக்கவிட்ட அவர் 6 பவுண்டரி, 6 சிக்சர் என 36 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இதில் ஸ்ரேயா 22 பந்துகளில் எல்லாம் அரை சதம் கடந்தார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னுடைய தனிப்பட்ட சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் அதிரடி காட்டி ஆட்டம் இழந்தார். நெஹல் வதேரா தன் பங்கிற்கு 27 ரன்கள் சேர்க்க நடு வரிசையில் ஷாசாங் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 200 ரன்களை தாண்டினாலும் 240 ரன்கள் தொடாத என எதிர்பார்க்கப்பட்டது.
அப்போதுதான் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டோனிஸ் களமிறங்கி சமி ஓவரை பிரித்து மேய்ந்தார். கடைசி ஓவரின் நான்கு சிக்ஸர்களை தொடர்ந்து அவர் அடிக்க 11 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் ஹர்சல் பட்டேல் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 42 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.