முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 111 ரன்கள் எடுத்து அதை வைத்து வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ஆண்டு கால சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை முறியடித்து இருக்கிறது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் வங்கதேசம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோரை வைத்து வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த ஸ்கோரை வைத்து பஞ்சாப் கிங்ஸ் அணியால் வெற்றி பெற முடியாது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதை எளிதாக எட்டி வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர்.

அதற்கு ஏற்ப கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரடியாக விளையாடி வந்தது. 72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருந்தது. ஆனால் அதன் பிறகு அடுத்த 24 ரன்களை எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆல் அவுட் ஆனது. 15.1 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை செய்து இருக்கிறது. மிகக் குறைந்த ஸ்கோரை வைத்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை செய்து இருக்கிறது. இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அப்போதைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 116 ரன்கள் மட்டுமே எடுத்து அதை வைத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
அதுவே மிகக் குறைந்த ஸ்கோரை வைத்து ஐபிஎல்-ல் ஒரு அணி பெற்ற வெற்றியாக இருந்தது. அந்த 16 ஆண்டு கால சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி இப்போது முறியடித்து இருக்கிறது. மேலும், ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோரை சேசிங் செய்த அணி என்ற சாதனையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வசம்தான் உள்ளது.
கடந்த ஆண்டு 2024 ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 260 ரன்கள் எடுத்திருந்தது. அந்த இமாலய இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி அப்போது எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றின் மிகப் பெரிய சேசிங்கையும், மிகக் குறைந்த ஸ்கோரை வைத்து வெற்றியையும் பெற்று இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.