மும்பை: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்தே பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இதுவரை 17 சீசன்களில் ஒரு முறை இறுதிப்போட்டிக்கும், ஒரு முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. எத்தனை கேப்டன்கள், பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டாலும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆட்டத்தில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை.
இருந்தாலும் பிரீத்தி ஜிந்தா ஒவ்வொரு முறையும் பஞ்சாப் அணியின் செயல்பாடுகளை தீவிரமாக ஆதரித்து வருவார். கடந்த சில ஆண்டுகளில் பஞ்சாப் அணியின் மதிப்பு அதிகரித்துள்ளதோடு, ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி மெகா ஏலத்திற்காக தீவிரமாக தயாராகி வருகிறது. '

இந்த நிலையில் புதிய சிக்கல் ஒன்றில் பஞ்சாப் அணி சிக்கியுள்ளது. பஞ்சாப் அணிக்கு மொத்தமாக பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா, மோகித் பர்மன் மற்றும் கரண் பால் என்று 4 உரிமையாளர்கள் இருக்கின்றனர். இதில் பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இருவரும் தலா 23 சதவிகித பங்குகளை வைத்துள்ள நிலையில், மோகித் பர்மன் 48 சதவிகித பங்குகளை வைத்து கொண்டுள்ளார்.
மீதமுள்ள 6 சதவிகித பங்குகளை கரண் பால் வைத்துள்ளார். தற்போது மோகித் பர்மனிடம் உள்ள 48 சதவிகித பங்குகளில் 11.5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எதிர்த்து பிரீத்தி ஜிந்தாவின் ட்ரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தரப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மோகித் பர்மன் பஞ்சாப் அணியின் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து மோகித் பர்மன் தரப்பில் கேட்கையில், எனது கைகளில் உள்ள பங்குகளை விற்பனை செய்யும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணியின் 11.5 சதவிகித பங்குகளின் மதிப்பு ரூ.540 கோடி முதல் ரூ.600 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதனை அந்த அணி எப்படி சமாளிக்கும் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனால் பஞ்சாப் அணிக்குள் ஏதேனும் சிக்கல் வருமோ என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.