முல்லான்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி படுமோசமாக விக்கெட்டுகளை இழந்து வந்தபோது, 20 வயது வீரரை நம்பி ஆடுகளத்துக்கு அனுப்பி வைத்தார் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். அந்த 20 வயது வீரருக்கு இதுவே ஐபிஎல் அறிமுகப் போட்டி என்பதுதான் இதில் சுவாரசியமான விஷயம்.
ஆனால், அந்த வீரர் வந்தவுடன் 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அந்த இளம் வீரர் சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கான் ஆவார். ரிக்கி பாண்டிங் செய்த இந்த நகர்வு விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.

இந்த ஆண்டு முழுவதும் முஷீர் கான் பஞ்சாப் கிங்ஸ் அணியில் மாற்று வீரராகவே இருந்தார். சில போட்டிகளில் இம்பேக்ட் வீரராக அவரது பெயர் பட்டியலில் இடம் பிடித்தாலும், எந்தப் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்தது.
அப்போது அந்த அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அப்போது இம்பேக்ட் வீரரான முஷீர் கானை ஆடுகளத்துக்கு அனுப்பினார் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.
அப்போது மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆடுகளத்தில் இருந்தார். அவர் சற்று அதிரடியாக ஆடி வந்தார். எனவே, அவருடன் இணைந்து முஷீர் கான் ஓரளவு ரன் சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 150 ரன்கள் எடுத்தால் கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
ஆனால், முஷீர் கான் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். சுயாஷ் ஷர்மாவின் சுழற்பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சுயாஷ் ஷர்மா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், சஷாங்க் சிங் மற்றும் முஷீர் கான் என மூன்று பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து ரிக்கி பாண்டிங்கின் இம்பேக்ட் வீரர் திட்டமும் தோல்வியடைந்தது. முக்கியமான ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் 20 வயது வீரரை திடீரென அறிமுகம் செய்தது சரியா என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். முஷீர் கான் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், அவரை லீக் சுற்றிலேயே ஏதேனும் ஒரு போட்டியில் பேட்டிங் செய்ய வைத்திருக்க வேண்டும்.
அப்போதெல்லாம் விட்டுவிட்டு, இக்கட்டான நேரத்தில் அந்த 20 வயது வீரரை அறிமுகம் செய்து அழுத்தம் கொடுப்பது சரியா? அதனால்தான் அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகிவிட்டார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. பின்னர் இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவர்களுக்குள்ளாகவே வெற்றி இலக்கை எட்டிப் போட்டியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.