சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய ஒட்டுமொத்த ஐபிஎல் சீசன்களின் எண்ணிக்கையை விடவும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன்கள் எண்ணிக்கை அதிகம் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சமீபத்தில் பஞ்சாப் கிங்ஸ், தங்கள் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமித்து இருந்தது. அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் 17 வது கேப்டன் ஆவார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 15 ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி உள்ளது. இடையே இரண்டு ஆண்டுகள் தடையின் காரணமாக சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. அதை சுட்டிக்காட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய ஐபிஎல் சீசன் எண்ணிக்கையை விட பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக கேப்டன்களை நியமித்து இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன்கள்: 1. யுவராஜ் சிங் 2. குமார் சங்கக்காரா 3. மகிளா ஜெயவர்த்தனே 4. ஆடம் கில்கிறிஸ்ட் 5. டேவிட் ஹஸ்ஸி 6. ஜார்ஜ் பெய்லி 7. வீரேந்தர் சேவாக் 8. டேவிட் மில்லர் 9. முரளி விஜய் 10. கிளென் மேக்ஸ்வெல் 11. ரவிச்சந்திரன் அஸ்வின் 12. கே எல் ராகுல் 13. மயங்க் அகர்வால் 14. ஷிகர் தவான் 15. சாம் கர்ரன் 16. ஜிதேஷ் சர்மா 17. ஸ்ரேயாஸ் ஐயர்
பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்டு வரும் அணி என்ற பெயரையும் எடுத்து இருக்கிறது. அதற்கு காரணம் அந்த அணி தங்கள் வீரர்களை நம்பாதது தான் என்ற விமர்சனம் உள்ளது.
அதற்கு உதாரணம் தான் 17 கேப்டன்கள். 17 சீசன்களில் அந்த அணி 17 கேப்டன்களை பயன்படுத்தி இருக்கிறது. ஆனால், ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நான்கு கேப்டன்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளது. தோனி பெரும்பாலான போட்டிகளுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.
தோனி காயத்தால் விலகிய போது சுரேஷ் ரெய்னா ஆறு போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா எட்டு போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரே இனி தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு கேப்டனாக செயல்படுவார்.
மற்றொரு வெற்றிகரமான ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் இதுவரை 9 கேப்டன்களை பயன்படுத்தி உள்ளது. அதில் 10 ஆண்டுகள் ரோஹித் சர்மா அந்த அணியின் கேப்டனாக இருந்தார். அப்போதுதான் மும்பை அணி ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றது. ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர். மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டுமே பத்து போட்டிகளுக்கும் அதிகமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு உள்ளனர்.
அவர்களின் கேப்டன்சியில் அந்த அணி கோப்பை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து தெளிவாக தெரிவது என்னவெனில், எந்த ஒரு அணி கேப்டனை மாற்றாமல், முக்கிய வீரர்களை அதிக அளவில் மாற்றாமல், தொடர்ந்து அணியை தக்க வைத்து செயல்படுகிறதோ அந்த அணியே அதிக முறை கோப்பை வென்று உள்ளது. இதை சுட்டிக்காட்டி பஞ்சாப் கிங்ஸ் அணியை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.