சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இன்று முதல் குவாலிபயர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. சந்திகாரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
தோல்வி அடையும் அணி குவாலிஃபையர் 2வில் விளையாட மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர் சி பி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியில் காயம் காரணமாக இடம்பெறாத ஹேசல்வுட் தற்போது அணிக்கு திரும்பியிருக்கிறார்.

பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பலமே அந்த அணியின் தொடக்க வீரர்கள் தான். இந்த சீசனில் பிரியான்ஸ் ஆர்யாவும், பிராப்சிம்ரன் சிங்கும் நன்றாக அடித்து விளையாடிய போதெல்லாம் பஞ்சாப் அணி வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த சூழலில் இந்த இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் களமிறங்கிய ஆர்சிபி அணி அதனை சிறப்பாக செய்து முடித்தது.
இளம் வீரர் பிரியான்ஸ் ஆர்யாவின் விக்கெட்டை யாஷ் தயால் வீழ்த்த அனுபவ வீரர் புவனேஸ்வர் குமார், பிராப்சிம்ரன் சிங் விக்கெட்டை 18 ரன்களில் வீழ்த்தினார். இந்த சூழலில் பெரிதும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் தன்னுடைய அனுபவம் வாய்ந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி பஞ்சாப் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
ஹேசல்வுட் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களில் ஆட்டம் இழக்க, அதிரடி வீரர் ஜோஸ் இங்கிலீஷ் 4 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான நேகல் வதேரா 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக பஞ்சாப் அணி முதல் பவர் பிளே முடிவில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழந்ததால் பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இது ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.