சென்னை: ஐபிஎல் தொடரில் நடக்கவுள்ள மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கேகேஆர் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் விக்ரம் சொலங்கி விலகவுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தான் பயிற்சியாளராக சென்றுவிட்டார். இன்னொரு பக்கம் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை அந்த அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. அதேபோல் மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்திய முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை ஒப்பந்தம் செய்ய ஏராளமான அணிகள் தீவிரமாக இருக்கின்றன.

இந்த பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இணைந்துள்ளது. அனில் கும்ப்ளேவுக்கு பின் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் பயிற்சியாளர் பேலிஸ் நியமனம் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே கேகேஆர் அணியின் பயிற்சியாளராக ஐபிஎல் தொடரில் கோப்பை வென்றவர். அதேபோல் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.
இதனால் பேலிஸ் பயிற்சியின் கீழ் பஞ்சாப் அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் பஞ்சாப் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இதனால் பேலிஸ் உடனான ஒப்பந்தம் இதுவரை புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனிடையே பஞ்சாப் அணி நிர்வாகக் குழு கூட்டம் 2 நாட்களுக்கு முன் நடப்பதாக இருந்தது.
ஆனால் சில நிர்வாகிகளால் பங்கேற்க முடியாததால் நடக்கவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் அணி நிர்வாகம் தரப்பில் இந்திய பயிற்சியாளர் ஒருவரை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கேகேஆர் அணி எப்படி கவுதம் கம்பீர் - சந்திரகாண்ட் பண்டிட் கூட்டணியை வைத்து பணியாற்றியதோ, அதுபோல் இருவரை வைத்து செயல்பட பஞ்சாப் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் பஞ்சாப் அணியுடன் பயணித்து வரும் சஞ்ச்ய் பங்கரை தலைமைப் பயிற்சியாளராக கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்திய ஜாம்பவான் ஒருவரையும் ஆலோசகராக கொண்டு வரும் திட்டத்தில் பஞ்சாப் அணி நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.