மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தான். இரு அணிகளும் தலா ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கடவுள் கொடுத்த பரிசு என்றால் இந்த அணிதான் என்று அஸ்வின் அளித்துள்ள பேட்டி சிஎஸ்கே ரசிகர்களை கடுப்படைய செய்து இருக்கிறது.
ஏனென்றால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் முதன்முறையாக அஸ்வின் விளையாடுகிறார். பல அணிகளில் தடுமாறிய வீரர்கள் எல்லாம் சிஎஸ்கேவுக்கு வந்த பிறகு சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து இருக்கிறார்கள்.

இதற்கு சிஎஸ்கே அணி வீரர்களை பார்த்துக் கொள்ளும் விதம்தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடவுள் கொடுத்த பரிசு என்றால், அது ஆர் சி பி அணி தான் என்று அஸ்வின் கூறி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆர் சி பி ரசிகர்கள் விராட் கோலியை மிகவும் நேசிக்கிறார்கள்.
பலரும் ஆர் சி பி அணியை கேலி கிண்டல் செய்வதால் அந்த ரசிகர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால் ஆர் சி பி அணிக்கு விசுவாசமான ரசிகர்களை கடவுள் பரிசாக கொடுத்திருக்கிறார். ஆர் சி பி அணியின் தூணாக ரசிகர்கள் இருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் அந்த அணி ரசிகர்கள் ஆர்சிபிக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.
ஆர் சி பி அணி கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய அணிகளில் ஒன்றாக இருக்கிறது. ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு வந்து ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஆனாலும் ரசிகர்கள் அவர்களை கொண்டாடுகிறார்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய அஸ்வின் ரோகித் சர்மாவை எந்த அணியாவது தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவருக்கு என 20 கோடி ரூபாயை எடுத்து தனியாக வைத்து விடுங்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார். அஸ்வின் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பஞ்சாப் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியுள்ள நிலையில் தற்போது ஆர் சி பி அணியை அவர் பாராட்டுகிறார். இதனால் ஆர்சிபிக்கு அஸ்வின் விளையாட போகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.