மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் முடி சூடா மன்னனாக விளங்கி வருகிறார். 38 வயதாகி இருக்கும் அஸ்வின் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சூழலில் ஐபிஎல் அணிகள் அஸ்வினை புறக்கணிக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அஸ்வின் கிரிக்கெட்டில் எப்போதுமே சீர்திருத்தம் குறித்து பேசுவார். விதிகளை சரியாக பயன்படுத்துவதில் வல்லவராக இருக்கும் அஸ்வின், எப்போதும் யாருக்கும் பயப்படாமல் மனதில் படும் விஷயங்களை பேசக்கூடியவராக உள்ளார்.

இந்த வகையில் அஸ்வின், அண்மையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களுக்கு இருக்கும் சில குறை நிறைகளை தெரிவித்தார். குறிப்பாக ஆர்டிஎம் கார்டை பயன்படுத்துவது குறித்து அஸ்வின் ஒரு சீர்திருத்தத்தை முன்மொழிந்தார். இதனை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ, ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தினாலும் இனி மீண்டும் ஒரு அணி ஏலம் கேட்க வாய்ப்பு வழங்கப்படும்.
இதன் மூலம் கூடுதல் பணம் வீரர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று 20 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீரர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை அதே சம்பளத்தில் விளையாடும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அஸ்வின் கூறியிருந்தார். இதனை கருத்தில் கொண்டு இனி ஒவ்வொரு போட்டிக்கும் தலா ஏழரை லட்சம் ரூபாய் சம்பளம் தனியாக வழங்க வேண்டும் என்று பிசிசிஐ ஐபிஎல் அணிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளும் தற்போது அஸ்வின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. அஸ்வின் முன்மொழிந்த ஆர் டி எம் கார்டு விதியை ரத்து செய்ய வேண்டும் என்று அணிகள் பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்த நிலையில் அஸ்வின் தான் இந்த மாற்றங்களுக்கு காரணம் என்பதால் அவரை மெகா ஏலத்தில் தேர்வு செய்யாமல் பிளாக்லிஸ்ட் செய்ய ஐபிஎல் அணிகள் திட்டம் தீட்டலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா, சர்ச்சை ஒன்றில் சிக்கியதால் அவர் எந்த அணி நிர்வாகத்தாலும் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். இதைப் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அனைத்து அணிகளும் சேர்ந்து பேசி வைத்துக்கொண்டு புறக்கணித்தார்கள். தற்போது அதேபோல் ஒரு நிலை அஸ்வினுக்கு ஏற்படலாம் என தெரிகிறது.