மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. ஐபிஎல் தொடரில் எப்போதும் பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணிகள் தகுதி பெறப்போகிறது என்பது கடைசி கட்டத்தில் தான் தெரிய வரும்.
ஆனால் இந்த சீசனில் ஏழு போட்டிகள் எஞ்சியிருந்த நிலையில் எந்த நான்கு அணிகள் தகுதி பெற்றது என்பது ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது. இதனால் பெரிய அளவு சுவாரசியம் இல்லை. ஆனால் முதல் நான்கு இடத்தில் எந்த அணி எந்த இடத்தில் பிடிக்க போகிறது என்பது தெரியாமல் இருக்கிறது.

பிளே ஆப் சுற்றி முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிக்கு தான் அதிக சாதகம் இருக்கும் ஏனென்றால் குவாலிபயர் ஒன்று போட்டியில் தோல்வியை தழுவினால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு குவாலிபையர் 2வில் கிடைக்கும். மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அடி நேரடியாக எலிமினேட்டர் போட்டியில் தான் விளையாடும்.
இதில் தோல்வியை தழுவும் அணி தொடரை விட்டு வெளியேறிவிடும். இதனால் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணி எது என்பது தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று இருக்கிறது. இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் லீக் சுற்றில் விளையாடுகிறது. இதில் பஞ்சாப் அணி புள்ளி பட்டிகளில் இரண்டாவது இடத்திலும், மும்பை அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தையும் பிடித்திருக்கிறது.
இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தொடரை முதல் இரண்டு இடத்தில் நிறைவு செய்வார்கள். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிபையருக்கு தகுதி பெறும். இதேபோன்று செவ்வாய்க்கிழமை கடைசி லீக் ஆட்டம் ஆர்சிபி மற்றும் லக்னோ அணிக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.
இதில் ஆர்சிபி வெற்றி பெற்றால் அவர்கள் குவாலிபையர் ஒன்றுக்கு தகுதி பெறுவார்கள். ஒருவேளை அவர்கள் தோல்வியை தழுவினால் குஜராத் அணி குவாலிபையர் ஒன்றுக்கு தகுதி பெறுவார்கள். இதனால் கடைசி இரண்டு ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிஎஸ்கே அணி வெளியேறிய நிலையில் இறுதிப்போட்டியில் மும்பையும் ஆர்சிபியும் மோதினால் சிறப்பான சம்பவம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.