மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராஜஸ்தான் அணியின் இயக்குநராக பணியாற்றி வந்த இலங்கை ஜாம்பவான் சங்கக்காரா நீக்கப்பட்டரா என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கியமான காரணமாக அமைந்தவர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். டி20 உலகக்கோப்பையை வென்ற பின் விராட் கோலி நேரடியாக கோப்பையை கொண்டு சென்று ராகுல் டிராவிட் கைகளில் கொடுத்தார். அதனை பெற்றுக் கொண்ட ராகுல் டிராவிட், தேக்கி வைத்திருந்த அத்தனை மகிழ்ச்சியையும் ஆக்ரோஷமாக கத்தி வெளிப்படுத்தினார்.

இதனை பார்த்த ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கண்ணீர் வந்தது என்றே சொல்லலாம். ஏனென்றால் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலேயே மீண்டும் எழுந்து நின்ற ராகுல் டிராவிட்டின் கதையை ஒவ்வொரு இந்திய ரசிகனும் கூறினர். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையுடன் ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் ஒப்பந்தம் நிறைவடைந்தது. புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
ஆனால் ராகுல் டிராவிட்டின் அடுத்த திட்டம் என்ன என்பது தெரியாமல் இருந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, தற்போது எனது 2 மகன்களை வீட்டில் இருந்து பார்த்து கொள்ள வேண்டும் என்பதே மனைவியின் விருப்பம் என்று கூறியிருந்தார். இதனிடையே ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் இந்திய யு19 அணியில் இடம்பிடித்து அசத்தினார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் அவரை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்ய மும்பை, டெல்லி மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 3 அணிகளும் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்துடன் வீரர்களின் ரீடென்ஷன் குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையும் ராகுல் டிராவிட் நடத்தி முடித்திருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் செயல்பட்ட ராகுல் டிராவிட், அதன்பின் 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பயிற்சியாளராக செயல்பட்டார்.
அதன்பின் 2016ஆம் ஆண்டு டெல்லி அணியுடன் பணியாற்றிய அவர், பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் என்சிஏ பொறுப்புக்கு வந்தார். அதேபோல் ராஜஸ்தான் அணி தரப்பில் ராகுல் டிராவிட்டின் துணைப் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோரை ஒப்பந்தம் செய்யவும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ராஜஸ்தான் அணி புதிய மாற்றத்திற்கு தயாராகி வருவதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ராஜஸ்தான் அணியின் இயக்குநராக பணியாற்றி வந்த இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா, இனி பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் ஆகிய அணிகளுடன் பணியாற்றவுள்ளார். முதல் சீசனில் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பின், 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதன்பின் கடந்த சீசனில் குவாலிஃபையர் 2வில் வெளியேறியது.
அதுமட்டுமல்லாமல் யு19 வீரராக இருந்த போது ராகுல் டிராவிட்டுடன் நல்ல உறவில் இருப்பவர் சஞ்சு சாம்சன். இதனால் வரும் காலங்களில் சஞ்சு சாம்சனின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டும் முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லக்னோ அணி ஜாகீர் கானை ஆலோசகராக கொண்டு வந்துள்ளது. தற்போது ராஜஸ்தான் அணியும் ராகுல் டிராவிட்டை ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு அணியும் தங்களின் புதிய பயிற்சியாளர் ஒப்பந்தம் குறித்து அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.