மும்பை: ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பல்வேறு அணி நிர்வாகங்கள் தரப்பில் ராகுல் டிராவிட்டை ஒப்பந்தம் செய்வதற்கு பிளாங்க் செக் கொடுக்கப்பட்ட விவகாரம் தெரிய வந்துள்ளது. பிளாங்க் செக் கொடுக்கப்பட்ட போதும், ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்தும் பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றிய பின், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பணிக் காலம் முடிவுக்கு வந்தது. அதன்பின் ராகுல் டிராவிட் எந்த அணிக்கு பயிற்சியாளராக செல்வார் என்று கேள்வி எழுந்தது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் விளையாடும் வரும் பல்வேறு அணிகளும் இந்திய பயிற்சியாளரை ஒப்பந்தம் செய்வதில் தீவிரமாக இருந்தது.

குறிப்பாக டெல்லி, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் ராகுல் டிராவிட்டை ஒப்பந்தம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதில் சில அணிகள் தரப்பில் ராகுல் டிராவிட்டிற்கு சில அணி நிர்வாகங்கள் ஊதியம் குறித்த எந்த விவாதத்தையும் மேற்கொள்ள விரும்பாமல், பிளாங்க் செக்கை கொடுத்துள்ளனர். ஆனால் இறுதியாக ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
நட்சத்திர அணிகள் தரப்பில் மிகப்பெரிய ஊதியத்தை கொடுக்க முன் வந்த போதும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராகுல் டிராவிட் தேர்வு செய்தது ஏன் என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. இந்த நிலையில் ராகுல் டிராவிட் முடிவுக்கு பின் 2011ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலமே முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. அதாவது ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு முதல் 3 ஆண்டுகளும் ராகுல் டிராவிட் ஆர்சிபி அணிக்காகவே விளையாடினார்.
இதன்பின் 2011ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராகுல் டிராவிட்டை மீண்டும் வாங்க ஆர்சிபி அணி விரும்பவில்லை. மெகா ஏலத்தின் போது ஆலோசகர் அனில் கும்ப்ளே, உரிமையாளர் விஜய் மல்லையா உள்ளிட்டோர் ராகுல் டிராவிட்டின் பெயர் வந்த போது, வாங்க விருப்பமில்லை என்று அமைதி காத்தனர். ராகுல் டிராவிட்டின் சொந்த ஊரில் நடக்கும் ஏலத்திலேயே அவர் வாங்கப்படவில்லை என்றால், அவரின் சுயமரியாதை பாதிக்கும் என்று பார்க்கப்பட்டது.
அப்போது ராகுல் டிராவிட்டை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன் வந்தது. அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் கேப்டன்சியும் அளிக்கப்பட்டது. அதன்பின் 3 ஆண்டுகளில் 343, 462 மற்றும் 471 ரன்களை ராஜஸ்தான் அணிக்காக ராகுல் டிராவிட் குவித்தார். அதேபோல் ராஜஸ்தான் அணியை 2014ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றதோடு, சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். இதன்பின் ஓய்வை அறிவித்த ராகுல் டிராவிட், அந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
கடினமான காலங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் அவருக்கு உறுதுணையாக நின்றது. இதனை மறக்காத ராகுல் டிராவிட் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கோரிக்கைக்கு ஏற்ப உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ராஜஸ்தான் அணியுடன் பயணித்து வரும் சங்கக்காராவுக்கு அந்த அணி நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.5 கோடி ஊதியம் அளித்து வருகிறது. இதனால் ராகுல் டிராவிட்டின் ஊதியம் அதிகபட்சமாக ரூ.7 கோடி வரை இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.