மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட, அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று கனவு முடிவுக்கு வரும். கடந்த 3 சீசன்களில் 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் அணி முன்னேறி இருந்தது.
ஒரு சீசனில் கடைசி நேரத்தில் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டிருந்தது. ஆனால் இந்த சீசனில் ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே சொதப்பி வருகிறது. அதற்கு அந்த அணிக்குள் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிடென்ஷன் தொடங்கி கேப்டன்சி வரை ராஜஸ்தான் அணியில் ஏராளமான சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.

முதலில் ஜோஸ் பட்லர் மற்றும் சாஹல் ஆகியோரை விடுவித்து, அவர்களுக்கு பதிலாக ஹெட்மயர் மற்றும் துருவ் ஜுரெல் இருவரையும் தக்க வைத்தது மிகப்பெரிய தவறாகும். ஏனென்றால் துருவ் ஜுரெல் டி20 கிரிக்கெட்டில் இன்னும் நிரூபிக்காத ஒருவர். ரிடென்ஷனின் போது சஞ்சு சாம்சன் முழுமையாக பட்லர் மற்றும் சாஹலை தக்க வைக்க வேண்டும் என்று விரும்பியதாக தெரிகிறது.
ஆனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல் ரிடென்ஷனின் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு துணைக் கேப்டன் பதவி அளிக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர வீரராக இருப்பதால், அவர் தன்னை கேப்டனாக உயர்த்தி கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் கூட கேப்டன் பதவி அளிக்கப்பட்டதால் ரஞ்சி டிராபியில் மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் பதவியை அடைவதற்கு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமாகும். இதனால் ராஜஸ்தான் அணியின் துணைக் கேப்டனாகும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் இல்லாத நேரங்களில் எளிதாக கேப்டனாக செயல்பட முடியும்.
ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்கிய போது நடந்த சம்பவங்கள்தான் அந்த அணிக்குள் மிகப்பெரிய பிரளயத்தையே உருவாக்கி இருக்கிறது. அதாவது ராஜஸ்தான் அணி முதல் 3 போட்டிகளை அஸ்ஸாம் மாநிலத்தில் விளையாடியது. அஸ்ஸாம் மாநிலத்தில் ரியான் பராக்-க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் விளையாடும் முதல் வீரர் ரியான் பராக் தான்.
இதனால் ரசிகர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் அணி நிர்வாகம் ரியான் பராக்கை கேப்டனாக அறிவித்தது. இதனால் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டென்ஷனாகி இருக்கிறார். சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய போதும், ரியான் பராக்கை கேப்டனாக விளையாட வைக்கும் முடிவில் இருந்து கொஞ்சம் கூட அந்த அணி நிர்வாகம் பின் வாங்கவில்லை.
இதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் முக்கியமானவர் ரஞ்சித் பர்தாகூர். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், ராயல்ஸ் மல்டிஸ்போர்ட் பிரைவட் லிமிடட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்தான் ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக கொண்டு வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ரஞ்சித் பர்தாகூர் மற்றும் ரியான் பராக் தந்தை பராக் குமார் தாஸ் இருவரும் சகோதரர்கள். இதன் மூலமாக ரஞ்சித் பர்தாகூர் மற்றும் ரியான் பராக் இருவரும் உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ரஞ்சித் பர்தாகூர் தலையீட்டால் மட்டுமே ராஜஸ்தான் அணியால் ரியான் பராக் 17 வயதிலேயே ஒப்பந்தம் செய்யப்பட காரணமாக கூறப்பட்டு வருகிறது.
அந்த சமயத்தில் ரியான் பராக் யு19 கிரிக்கெட் வீரராக இருந்தார். ஆனாலும் அவசர அவசரமாக ரியான் பராக் ஒப்பந்தம் செய்யப்பட இதுவும் காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் தற்போது சஞ்சு சாம்சன் காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் ஃபீல்டிங் செய்ய முடியாததால், ரியான் பராக்கை கேப்டனாக நியமிக்கலாம் என்ற முடிவிற்கு பின் ரஞ்சித் பர்தாகூர் இருந்ததாக கூறப்பட்டு வருகிறது.
இதனால் ரியான் பராக்கை கேப்டனாக நியமிக்க ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக ரஞ்சித் பர்தாகூர் கொண்டு வந்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் கூட டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. அந்த போட்டியில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக வெளியேறியதால், பொறுப்பு கேப்டனாக ரியான் பராக் தான் களத்திற்கு வந்தார்.
அப்போது ராகுல் டிராவிட் ராஜஸ்தான் அணியுடன் ஆலோசனைநடத்திய போது, ஒரு கேப்டனாக சஞ்சு சாம்சன் அவர் அருகில் இருந்திருக்க வேண்டும். ஆனால் சஞ்சு சாம்சன் வீரர்களுக்கு பின்னால் வேறு எங்கோ நடந்து சென்று கொண்டிருந்தார். இதன் மூலமாக சஞ்சு சாம்சனின் கருத்துகளை ராகுல் டிராவிட் ஏற்பதில்லை என்று பார்க்கப்பட்டது.
அதேபோல் இந்த சீசனில் ரியான் பராக் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியில் நிரந்தர வீரராக இடம் கூட பிடிக்க முடியாமல் தடுமாறும் ரியான் பராக்கை விடவும் ஜெய்ஸ்வால் கேப்டன்சி செய்ய தகுதியானவராகவே இருக்கிறார். ஆனாலும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் ரியான் பராக்கையே மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது.
இதனால் வரும் நாட்களில் ராஜஸ்தான் அணியில் இருந்து ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் விலகக் கூடும் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணியை மோசமான நிலையில் இருந்து முன்னேற்றியதில் சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஏனென்றால் சஞ்சு சாம்சனுக்கு 2022 மெகா ஏலத்திற்கு முன் மிகப்பெரிய அணிகளில் இருந்து அழைப்பு வந்தது.
சிஎஸ்கே, மும்பை, ஐதராபாத் என்று பெரிய அணிகளில் இருந்து சஞ்சு சாம்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் வரக்கூடும் என்று பலரும் கூறி வந்தனர். ஏனென்றால் தமிழ்நாடு மற்றும் கேரளா ரசிகர்கள் மத்தியில் சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்து வந்தது.
ஆனால் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியிலேயே இருந்து அந்த அணியை கட்டமைத்தார். இன்னும் சொல்லப் போனால் அஸ்வின், சாஹல், போல்ட் உள்ளிட்டோரை ராஜஸ்தான் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முடிவை முன் கூடியே சஞ்சு சாம்சன் எடுத்திருக்கிறார். ஆனால் இம்முறை சஞ்சு சாம்சனிடம் அப்படியான கருத்துகளை பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.