மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக 5 வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதியளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிஎஸ்கே, மும்பை உள்ளிட்ட அணிகளை விடவும், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு தான் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிசிசிஐ தரப்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சவுதி அரேபியா அல்லது துபாயில் மெகா ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலமாக முதலீடுகளை அதிகரிக்க முடியும் என்று பிசிசிஐ நம்பிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில் முதற்கட்டமாக பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் ரிடென்ஷன் விதிமுறைகளை வெளியிட தயாராகியுள்ளது. அதில் ஒவ்வொரு அணிகளும் 5 வீரர்களை தக்க வைக்க அனுமதியளிக்க உள்ளதாகவும், ஆர்டிஎம் வாய்ப்புகளை வழங்க வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல்வேறு அணி நிர்வாகங்களும் குழப்பத்தை ஆழ்ந்துள்ளன.
ஏனென்றால் 2018 மெகா ஏலத்தின் போதே 4 வீரர்களை தக்க வைக்க அனுமதியளித்ததோடு, 2 ஆர்டிஎம் வாய்ப்புகளையும் அளித்தது. இதன் மூலமாக 6 வீரர்களை ஒவ்வொரு அணிகளாலும் தக்க வைக்க முடிந்தது. ஆனால் இம்முறை வெறும் 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க பிசிசிஐ அனுமதியளித்திருப்பதால், என்ன செய்வதென புரியாமல் ஐபிஎல் உரிமையாளர்கள் இருக்கின்றனர்.
அதேபோல் புதிதாக என்ன மாதிரியான விதிமுறைகள் வரும் என்பதும் தெரியவில்லை. இதனால் மும்பை, சிஎஸ்கே உள்ளிட்ட அணிகளை விடவும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் தான் அதிக பாதிப்பை சந்திக்கும். ஏனென்றால் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளில் தான் இந்திய இளம் வீரர்கள் அதிகளவில் இருக்கின்றனர்.
சஞ்சு சாம்சன், ரவிச்சந்திரன் அஸ்வின், சாஹல், ரியான் பராக், துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு வீரர்களில் ஜோஸ் பட்லர், போல்ட் மற்றும் ஹெட்மயர் ஆகிய மூவரும் மிக முக்கியமான வீரர்களாக இருந்து வருகின்றனர்.
இதில் இருந்து 5 வீரர்களை மட்டும் தக்க வைத்தால், ராஜஸ்தான் அணி பலவீனமடையும். அதிகபட்சமாக சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் மற்றும் சாஹல் ஆகிய 5 வீரர்களை தான் தக்க வைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அஸ்வின், ஜுரெல் உள்ளிட்ட வீரர்கள் மெகா ஏலத்திற்கு அனுப்பப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
போல்ட் மற்றும் ஹெட்மயர் ஆகியோரையும் மீண்டும் ஏலத்தில் வாங்குவது எளிதான விஷயமல்ல. இதனால் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இயக்குநர் சங்கக்காரா ஆகியோர் இணைந்து முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்று வரும் சூழலில், மீண்டும் பலமான அணியை கட்டமைக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.