மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நெருங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் அணி தரப்பில் 3 இந்திய வீரர்களை மட்டும் தக்க வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கேப்டன் சஞ்சு சாம்சன், நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகிய மூவரையும் தக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக இன்னும் 11 நாட்களில் 10 ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்களும் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

வழக்கமாக டிசம்பர் மாதம் நடக்கும் ஐபிஎல் தொடரின் ஏலம், இம்முறை நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ளது. இதற்கு ஐசிசி தலைவராக ஜெய் ஷா டிசம்பர் 3ஆம் தேதி பொறுப்பேற்பதே காரணம். ஐசிசி தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பாகவே ஜெய் ஷா, ஐபிஎல் ஏலத்தை பிசிசிஐ செயலாளராக இருந்து நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளார்.
அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ராகுல் டிராவிட் மற்றும் சங்கக்காரா இணைந்து பணியாற்றவுள்ளது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ரூ.18 கோடிக்கு கேப்டன் சஞ்சு சாம்சனையும், ரூ.14 கோடிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலையும், ரூ.11 கோடிக்கு ரியான் பராக்கையும் ரீடெய்ன் செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லரை ரீடெய்ன் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரூ.18 கோடிக்கு பதிலாக மெகா ஏலத்தில் விட்டு ஜோஸ் பட்லருக்கு ஆர்டிஎம் பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஜோஸ் பட்லர் மெகா ஏலத்திற்கு வந்தால், அவரை வாங்க பெரிய இழுபறி நடக்கும் என்று பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் மும்பை மைதானத்தில் ஜோஸ் பட்லரின் அதிரடி உச்சத்தில் இருக்கும். மும்பை அணியும் வெளிநாட்டு தொடக்க வீரரை பயன்படுத்த தீவிரமாக உள்ளது. அதனால் டி காக் அல்லது ஜோஸ் பட்லரை வாங்குவதற்கு தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மும்பை அணிக்காக ஒரு சீசனில் பட்லர் விளையாடி இருக்கிறார்.
அதன்பின் 2018ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் ஜோஸ் பட்லரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. அப்போது முதல் ஒவ்வொரு சீசனிலும் மும்பை அணியை பொளந்து கட்டும் பணியில் பட்லர் தீவிரமாக இருப்பார். மும்பை அணி ரசிகர்களே பட்லரை பார்த்து புலம்ப தொடங்குவார்கள். அதேபோல் விக்கெட் கீப்பராகவும் பட்லர் செயல்பட முடியும் என்பதால், ரூ.15 கோடி வரை ஏலத்தில் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.