சென்னை: டிஎன்பிஎல் தொடரை ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல்முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. கேப்டன், பயிற்சியாளர், பவுலர், பேட்ஸ்மேன், ஃபீல்டர் என்று அத்தனை பணியையும் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச்சிறப்பாக செய்து கோப்பையை வென்றுள்ளார். இதனால் ஐபிஎல் தொடரிலும் அஸ்வினை ஏதாவது ஒரு அணி கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளன.
ஏற்கனவே பஞ்சாப் அணிக்கு கேப்டன்சி மேற்கொண்டுள்ள அஸ்வின், அந்த அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து செல்ல தவறினார். இந்த நிலையில் அஸ்வினின் கேப்டன்சி குறித்து தமிழக வீரர் பாபா இந்திரஜித் பேசுகையில், அஸ்வினை எப்போதும் அனைவருமே கேப்டனாக தான் பார்த்து வந்துள்ளோம். அவரிடம் மிகச்சிறந்த கிரிக்கெட் அறிவு கொட்டி கிடக்கிறது.

எப்போது ஒரு பேட்ஸ்மேனாகவும், பவுலராகவும் எதிரணிக்கு மேல் நிற்க ஆசைப்படுவார். அவரிடம் ஒரு அணியை வழிநடத்துவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. எனக்கு தெரிந்தவரை, ஒரு கேப்டனாக ஐபிஎல் தொடரை வெல்ல வேண்டும் என்பது தான் அஸ்வினின் கனவு. அஸ்வினின் பணிகள் வெறும் ஒரு வீரராக மட்டும் முடியவில்லை.
அவரின் திறமைகளை வளர்த்து கொள்வதோடு முடிந்தவிடவில்லை. மற்ற வீரர்களின் திறமைகளையும் வளர்க்க வேண்டிய நிலையில் அஸ்வின் இருந்தார். டிஎன்பிஎல் தொடர் நடந்த 35 நாட்கள் மட்டுமல்லாமல், தொடருக்கு முன் 10 நாட்கள் நடந்த பயிற்சி முகாமிலும் அஸ்வின் பங்கேற்றார். திண்டுக்கல் அணியின் முதல் வீரரிடம் இருந்து கடைசி வீரர் வரை அனைவருடனும் உரையாடுவார்.
அவர்களின் ஃபிட்னஸ் முன்னேற்றம் அடைய ஊக்கமளிப்பார். ஒரு தலைமைப் பயிற்சியாளர் இருந்திருந்தால் கூட இந்த அளவிற்கு பணியாற்றி இருக்க மாட்டார். ஆனால் அஸ்வின் அனைத்து பணிகளையும் செய்து வெற்றி கண்டுள்ளார் என்று தெரிவித்தார். ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள அஸ்வின், இனி முழுக்க முழுக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவுள்ளார்.
ஆனாலும் டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடர்களில் அஸ்வின் தனது திறமையை வளர்த்து கொண்டே இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதிலும் ஃபிட்னஸ், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், கேப்டன்சி என்று கிரிக்கெட் மீதான ஆர்வத்தை குறையவிடாமல் அஸ்வின் பணியாற்றி வருவது பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.