மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக எந்தெந்த அணிகளில் யார் யார் தக்க வைக்கப்படுவார்கள் என்ற விவாதம் ரசிகர்களிடையே தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளில் யார் தக்க வைக்கப்படுவார்கள் என்று விவாதம் நடத்தியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிமுறைகள் வெளியிட்டப்பட்ட நிலையில், ஒவ்வொரு அணிகளும் அடுத்தக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. எந்த வீரர்களை தக்க வைக்கலாம், யாருக்கு எந்த ஊதியம் அளிக்கலாம், யாரை விடுவிக்கலாம் என்பது போன்ற ஏராளமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த விவாதம் ரசிகர்கள் மத்தியிலும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூ-ட்யூப் சேனலில் ரிடென்ஷன் குறித்த விவாதத்தை நடத்தியுள்ளார். அதில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தரப்பில் எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது, அணி நிர்வாகங்கள் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்று பிரபல அனலிஸ்டான பிரசன்னாவுடன் பேசி இருக்கிறார்.
அதில் பஞ்சாப் அணியை பற்றி பேசுகையில், பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பொறுப்புக்கு வந்துள்ளார். இதுவரை பஞ்சாப் அணி மேற்கொண்ட மொத்த திட்டங்களும் மாற்றப்படும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் மெகா ஏலத்தில் சில ஆஸ்திரேலியா வீரர்களை பஞ்சாப் அணி நிச்சயம் வாங்கும். ஏனென்றால் பாண்டிங் அப்படியான ஒரு மனிதர் தான்.
நம்பிக்கை வாய்ந்த வீரர்களுடன் தான் செயல்படக் கூடியவர். மிட்சல் மார்ஷ், வார்னர் உள்ளிட்டோர் பஞ்சாப் அணிக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி ரிடென்ஷனை பொறுத்தவரை 2 வீரர்களை மட்டுமே தக்க வைக்க வேண்டும். அதாவது 2 வீரர்களுமே அன்-கேப்ட் வீரர்களாக வைத்து கொண்டு 4 ஆர்டிஎம் வாய்ப்புடன் ஏலத்திற்கு செல்ல வேண்டும்.
ஷஷாங்க் சிங் ஒரு ரிடென்ஷன், பின்னர் பிரப்சிம்ரன் சிங், ஹர்ப்ரீத் பரார் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகிய மூவரில் ஒருவரை பஞ்சாப் அணி தக்க வைக்க முயற்சிக்க வேண்டும். அந்த அணியில் சாம் கரண், லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோவ், ராகுல் சஹர், ரபாடா என்று ஏராளமான வீரர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி அளவிற்கு செல்வார்களா என்பது சந்தேகம் தான்.
இதனால் இரு அன்-கேப்ட் வீரர்களை ரூ.8 கோடிக்கு தக்க வைத்த பின், மீதமுள்ள ரூ.112 கோடிக்கு தேவையான வீரர்களை விடாபிடியாக சென்று வாங்கலாம். அதேபோல் ரபாடா, அஷுதோஷ் சர்மா, சாம் கரண் போன்ற வீரர்களுக்கு ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி குறைந்த தொகைக்கு வாங்க முயற்சிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.