மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், கடந்த மாதம் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்டிம் வாய்ப்புகள், ரீடென்ஷன் மற்றும் இம்பேக்ட் பிளேயர் விதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் ஒவ்வொரு விஷயமாக எடுத்து இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் விவாதித்து வருகிறார். இந்த நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதிகள் குறித்து அஸ்வின் பேசுகையில், இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து பலருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. குறிப்பாக இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக இந்தியாவில் ஆல்ரவுண்டர்கள் உருவாகும் வாய்ப்பு குறைவதாக விமர்சிக்கப்படுகிறது.

ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை நடந்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் ஆல்ரவுண்டர்கள் பெரியளவில் உருவாகவில்லை. தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்தால், பவுலிங் பயிற்சி ஒரு மணி நேரம் தான் செய்வார். ரியான் பராக்கும் அப்படிதான். ஏனென்றால் அவர்களுக்கு பேட்டிங்கில் அதிக ஆர்வமுள்ளது.
அதில் எந்த தவறும் கிடையாது. ஒரு ஆல்ரவுண்டராக இருக்கும் போது நம் மதிப்பு உயரும் என்று கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் நன்றாக தெரியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் யாரும் கைகளை சுற்றி பவுலிங் செய்ய முன்வரவில்லை. அதனால் இம்பேக்ட் பிளேயர் விதி இருந்தாலும், இல்லையென்றாலும் மாற்றம் பெரிதாக இருக்காது.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை புதிய புதிய விஷயங்கள் வர வேண்டும் என்று நினைக்கிறேன். இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் இந்திய இளம் வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. என்னை பொறுத்தவரை, ஒரு போட்டியில் பேட்டிங்கிற்கு தனியாக இம்பேக்ட் பிளேயர், பவுலிங்கிற்கு தனியாக இம்பேக்ட் பிளேயர் என்று 2 வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.
அதுதான் ஒவ்வொரு அணிக்கும் சரியான வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐபிஎல் தொடர் என்பதே பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்ட போது, கிரிக்கெட்டின் தூய்மை பாதிக்கும் என்று பேச தேவையில்லை. அதேபோல் ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளின் எண்ணிக்கையை 5ஆக அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.