மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ளது. இதுதொடர்பான ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், வெளிநாட்டு வீரர்களுக்கு பிரத்யேக விதியை கொண்டு வர வேண்டும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.
அதாவது வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கவில்லை என்றால், அவர்களை மினி ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும், குறைந்த தொகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால், அவர்களை 2 ஆண்டுகள் தடை விதிக்க விதிகள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

ஏனென்றால் ஹசரங்கா, பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், ஹாரி ப்ரூக், ஹசரங்கா உள்ளிட்ட வீரர்கள் மினி ஏலத்தில் பங்கேற்கவே அதிகமாக விரும்புகின்றனர். இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், மெகா ஏலத்தை பொறுத்தவரை இந்திய வீரர்களை கொண்டு அணியை கட்டமைக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் விரும்புவார்கள். இதனால் இந்திய வீரர்களுக்கு தான் அதிக தொகை கிடைக்கும்.
இதனை புரிந்து கொண்டு வெளிநாட்டு வீரர்கள் பலரும் மினி ஏலத்தில் வருவார்கள். அப்படி வரும் போதே, மாலத்தீவில் ஒரு கப்பலை வாங்கும் அளவிற்கு மிகப்பெரிய தொகையை எடுத்துச் செல்வார்கள். அதேபோல் குறைந்த தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டால், கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டு வரவில்லை என்று விலகி கொள்வார்கள்.
அதாவது ராஜஸ்தான், மும்பை, கேகேஆர் போன்ற அணிகள் 13 முறை ஏலத்தில் எப்படி ஒரு வீரரை வாங்கலாம் என்று பயிற்சி மேற்கொண்டு மிகப்பெரிய திட்டத்துடன் வந்து, குறிப்பிட்ட வீரரை வாங்குவார்கள். ஆனால் அந்த வெளிநாட்டு வீரர்களோ, மிகவும் சாதாரணமாக எனது வீட்டில் விவசாயம் செய்யப் போகிறேன் என்று ஜாலியான ஒரு காரணத்தை கூறிவிட்டு விலகிவிடுவார்கள்.
இதற்கு ஆப்பு வைக்கும் வகையில் ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் சில கருத்துகள் முன் வைக்கப்பட்டிருப்பதை அறிகிறேன். அதேபோல் வெளிநாட்டு வீரர்கள் எவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டாலும், இந்திய வீரர்களின் அதிகபட்ச ஊதியத்தை தான் கொடுக்க வேண்டும் என்று சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை வரவேற்கிறேன்.
ஏனென்றால் ஐபிஎல் தொடர் என்பது தொடங்கப்பட்டதற்கான காரணமாக இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும், அவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காக தான். அதிலும் இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்கள் அதிக ஊதியம் பெறுவது சரியல்ல என்று தெரிவித்தார். காவ்யா மாறனின் கருத்துக்கு அஸ்வின் வரவேற்பு தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது.