சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின், இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானம் அவருக்கு மிகவும் பிடித்த மைதானம், அவரது சொந்த மைதானம். அதில் அவர் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், இதுவரை சேப்பாக்கத்தில் நடந்த இரண்டு போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளையும், நேற்று கௌகாத்தியில் நடந்த போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார் அஸ்வின். மூன்று போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். மொத்தம் 10 ஓவர்களை வீசியிருக்கிறார். மேலும், இரண்டு போட்டிகளில் ஒரு ஓவருக்கு 11 ரன்கள் என்ற சராசரியையும் தாண்டி ரன்களை வாரி இறைத்து இருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜா மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது ஆகியோர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்கள். நூர் அகமது மூன்று போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது வரை ஐபிஎல் 2025 தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினாலும், இரண்டு போட்டிகளில் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்து எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ரவீந்திர ஜடேஜா மிக கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மூன்று ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் இரண்டு ஓவர்களில் 10 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே அவர் சற்று அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதை தவிர ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிலும் ஓரளவு ரன் சேர்த்து இருக்கிறார்.
அந்த வகையில் பார்த்தால் நூர் அகமது மற்றும் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியில் பொருந்திப் போகும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் செயல்பாடு கவலைக்குரியதாக உள்ளது. இனிவரும் போட்டிகளில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? அப்படியே இடம் கிடைத்தாலும் எத்தனை போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஸ்வினுக்கு மாற்றாக சிஎஸ்கே உத்தேச அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி உள்ளனர். அவர்கள் இருவரும் ஐபிஎல் அனுபவம் உள்ளவர்களே. ஸ்ரேயாஸ் கோபாலுக்கு நீண்ட அனுபவம் உள்ளது. மேலும் அவர்கள் ரன்கள் விட்டுக் கொடுப்பதிலும் சிக்கனமாக இருப்பதாகவே அவர்களின் புள்ளிவிவரம் சுட்டிக் காட்டுகிறது. எனவே, இனிவரும் போட்டிகளில் அஸ்வினுக்கு பதிலாக அவர்கள் இருவரில் ஒருவர் விளையாடவும் வாய்ப்பு உள்ளது.
செய்தி சுருக்கம்:
சிஎஸ்கே அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் மூன்று போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சேப்பாக்கம் மற்றும் கௌகாத்தியில் நடந்த போட்டிகளில் அவர் மொத்தம் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் அகமது ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
நூர் அகமது தற்போது ஐபிஎல் 2025 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக உள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் செயல்பாடுகள் கவலை அளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அஸ்வினுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபால் அல்லது கமலேஷ் நாகர்கோட்டி அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.