பெங்களுர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் பிரெவிஸ் ரிவ்யூ எடுக்க முடியாது என அம்பயர் அறிவித்தது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்தச் சம்பவத்தில், ரவீந்திர ஜடேஜா அப்போதே அம்பயருக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் அம்பயருடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக ஆடி, வெற்றி இலக்கை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது. ஆயுஷ் மத்ரே மற்றும் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆடினார்கள். ஆயுஷ் மத்ரே 48 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆடி அரை சதம் அடித்திருந்தார்.

அப்போது டெவால்ட் பிரெவிஸ் ஐந்தாவது வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். லுங்கி என்கிடி வீசிய முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ (LBW) முறையில் அவுட் ஆனார். அப்போது பந்து லெக் சைடில் செல்வதாக நினைத்த பிரெவிஸ், எதிர் முனையில் நின்றிருந்த ரவீந்திர ஜடேஜாவுடன் ரிவ்யூ கேட்பது குறித்து ஆலோசித்தார். அதன் பிறகு அவர் அம்பயரிடம் ரிவ்யூ கேட்பதாக சைகை செய்தார்.
ஆனால் அம்பயரோ, "'ரிவ்யூ செய்வதற்கான 15 வினாடி நேரம் முடிந்து விட்டது, நீங்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேறுங்கள்'" என்றார். அதை கேட்ட டெவால்ட் பிரெவிஸ் அதிர்ச்சியடைந்தார். அப்போது அம்பயர் ஏமாற்றுவதாக நினைத்த ரவீந்திர ஜடேஜா, அவருடன் வாக்குவாதம் செய்தார்.
இதில் மற்றொரு சர்ச்சையும் எழுந்துள்ளது. டெவால்ட் பிரெவிஸ் அவுட்டானதற்குப் பிறகு ரிவ்யூ கேட்பதற்காக ஆலோசனை செய்த போது, மைதானத்தில் இருந்த பெரிய திரையில் டைமர் காட்டப்படவில்லை. பொதுவாக இதுபோன்ற சூழ்நிலையில், பேட்ஸ்மேன்களுக்கும் ரசிகர்களுக்கும் எத்தனை வினாடிகள் மீதம் உள்ளன என்பதை தெரிந்து கொள்வதற்காக டைமர் திரையில் காட்டப்படும். ஆனால் இந்தச் சம்பவம் நடந்தபோது அது காட்டப்படவில்லை. இதன் மூலம் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பின்னர் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன் பிறகு, டெவால்ட் பிரெவிஸ் ரிவ்யூ சரியாக அமைந்திருந்தால், இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருக்கும் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.