மும்பை: சிஎஸ்கே அணி தரப்பில் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ரூ.18 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டது சரியா என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணி செய்துள்ள ரிடென்ஷன் பற்றியும் விவாதித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ரூ.18 கோடிக்கும், பதிரானாவை ரூ.13 கோடியும், சிவம் துபேவை ரூ.12 கோடிக்கும், தோனியை ரூ.4 கோடிக்கும் ரீடெய்ன் செய்துள்ளனர். இதன் காரணமாக சிஎஸ்கே பர்ஸ் தொகையில் ரூ.65 கோடி கழிக்கப்பட்டு, ரூ.55 கோடியுடன் மெகா ஏலத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதில் சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான ஜடேஜாவுக்கு ரூ.18 கோடி தேவையா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், அவருடன் சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த ரூ.14 கோடிக்கு ரீடெய்ன் செய்திருக்கலாம் என்று விவாதங்கள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், டி20 கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங், பவுலிங் இரண்டும் பெரிய அளவில் இருந்ததில்லை. அதனால் ஜடேஜாவுக்கு சிஎஸ்கே அணி கூடுதல் தொகையை கொடுத்துவிட்டதா என்ற சிந்தனை வருகிறது. நிச்சயம் அவர் சிஎஸ்கே அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வந்துள்ளார். ஆனால் தோனி அளவிற்கு பங்களித்ததில்லை.
அதனால் அவரை ரூ.18 கோடிக்கு ரீடெய்ன் செய்தது தேவையில்லாத ஒன்றாக நினைக்க தோன்றுகிறது. ஆனால் சென்னை அணி நிர்வாகம் அவர்களின் வீரர்களை குடும்பம் போல் பார்க்கிறது. அப்படியான வீரர்களை கைவிட கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. சில நேரங்களில் பணத்தை விடவும் அப்படியான திறமைகள் கிடைப்பது அரிதான விஷயம். ஜடேஜாவுக்கு நிகரான வீரராக அக்சர் படேல், க்ருணால் பாண்டியா உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
அந்த வகையில் டெல்லி அணியால் அக்சர் படேல் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளார். ஆனால் க்ருணால் பாண்டியாவிடம் ஜடேஜா அளவிற்கு கன்சிஸ்டன்சி இருக்கிறதா என்ற கேள்வி உள்ளது. அதனால் ஜடேஜாவை ரீடெய்ன் செய்ததை சரியான முடிவாகவே பார்க்கிறது. அதேபோல் சிஎஸ்கே அணியில் பதிரானாவும் தக்க வைக்கப்பட்டுள்ளார். அதில் தங்கத்திற்கு ஈடான டெத் ஓவர்களை வீசக் கூடிய பவுலர் அவர். இதன் மூலமாக சிஎஸ்கே அணி மொத்தமாக 8 ஓவர்களை வீசக் கூடிய பவுலர்களை ரீடெய்ன் செய்துள்ளது.
ஜடேஜா மிடில் ஓவர்களில் அசாத்தியமாக செயல்படக் கூடியவர்.ல் அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் மூலமாக கேப்டன் மற்றும் தொடக்க வீரர் என்ற இரு ரோல்களை செய்ய முடியும். சிவம் துபேவால் கீழ் வரிசையிலும் பேட்டிங் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் ஸ்பின்னர்களை வெளுப்பதில் சிறந்த வீரர் என்பதால், அதிக சிக்சர்களை விளாசுவார். அவருடன் தோனியும் இருப்பதால், ஜடேஜாவை எந்த சூழலிலும் பேட்டிங் செய்ய அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார்.