கொல்கத்தா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு யார் கேப்டனாக இருந்தாலும் விராட் கோலி சொல்வதை கண்டிப்பாக கேட்க வேண்டும் என வீரேந்தர் சேவாக் பேசியிருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது.
இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. இந்தப் போட்டியின் இடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார் விராட் கோலி சொல்வதை அவ்வப்போது கேட்டுக் கொண்டார். அதை அப்படியே செயல்படுத்தினார்.

இந்தப் போட்டியில் குவின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்துவதற்கு விராட் கோலி ஆலோசனை அளித்தார். ரஜத் படிதார் அந்த ஆலோசனையை அப்படியே கேட்டு பந்து வீச்சாளரிடம் அதை செய்யுமாறு சொன்னார். அதற்கு அடுத்த சில பந்துகளிலேயே குவின்டன் டி காக் ஆட்டம் இழந்தார்.
அப்போது வர்ணனையில் பேசிய வீரேந்தர் சேவாக், "விராட் கோலி ஒரு மன்னன், அவர் ஆலோசகர். கேப்டன் நிச்சயமாக அவரது ஆலோசனைகளை கேட்க வேண்டும். விராட் கோலி குவின்டன் டி காக்குக்கு எதிராக அதிக முறை விளையாடி இருக்கிறார், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக முறை விளையாடி இருக்கிறார். அவர் ரஜத் படிதாருக்கு குவின்டன் டி காக் விக்கெட்டை எப்படி வீழ்த்த வேண்டும், அவரது பலவீனம் என்ன என்பதை பற்றி சொன்னார். அந்தத் தகவலை கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சாளரிடம் சொன்னார். பந்து வீச்சாளர் குவின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார்" என்றார் வீரேந்தர் சேவாக்.
இந்த போட்டியில் குவின்டன் டி காக் 5 பந்துகளை மட்டும் சந்தித்து 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. இதன் மூலம் விராட் கோலி இந்த போட்டியில் தனது ஆலோசனையின் மூலம் முதல் திருப்பத்தை அளித்தார்.
அதன் பின் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது. 175 ரன்கள் என்ற இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.2 ஓவர்களிலேயே எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
செய்தி சுருக்கம்: