அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை ஆர் சி பி அணி வென்று ஒட்டுமொத்த விராட் கோலி ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் 18 ஆண்டுகளாக கோப்பையை வெல்வோம் என எதிர்பார்த்த ஆர் சி பி ரசிகர்களுக்கு ஒரு வழியாக அந்த கனவு நிறைவேறி இருக்கிறது.
அனில் கும்ப்ளே, விராட் கோலி , டுபிளிசிஸ் என பல கேப்டன்கள் ஆர் சி பி அணியை வழி நடத்திய நிலையில், இறுதியில் ரஜத் பட்டிதார் தான் கோப்பையை வென்று தந்திருக்கிறார். இந்த நிலையில் கோப்பையை வென்றது குறித்து பேசிய ரஜத் பட்டிதார், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது.

குறிப்பாக விராட் கோலிக்காகவும் இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்களுக்காகவும் இந்த கோப்பையை நாங்கள் வென்று இருக்கிறோம். இந்த கோப்பை ரசிகர்களான உங்களுக்கு உரியது. குவாலிஃபயர் முதல் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக கோப்பையை வென்றுவிட முடியும் என்று நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.
இந்த ஆடுகளத்தில் 190 ரன்கள் என்பது நல்ல இலக்காக இருந்தது. ஏனென்றால் ஆடுகளம் கொஞ்சம் தொய்வாக இருந்தது. எங்களுடைய திட்டத்தை பௌலர்கள் சிறப்பாக செயல்படுத்தினார்கள். குறிப்பாக குர்னல் ஆட்டத்தையே மாற்றிவிட்டார். எங்களுக்கு எப்போதெல்லாம் விக்கெட்கள் தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் அவர் விக்கெட்டை பெற்றுக் கொடுத்தார்.
அதேபோன்று சுயாஷ் ஷர்மா மற்றும் மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவருக்கும் இந்த சீசன் சிறப்பானதாக அமைந்தது.ரொமாரியோ எங்களுக்கு முக்கிய விக்கெட்டை வீழ்த்தி தந்தார்.எனக்கு தனிப்பட்ட முறையில் இது சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. விராட் கோலி போன்ற நபருக்கு தலைமை தாங்குவதன் மூலம் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றேன்.
விராட் கோலிக்கு தான் இந்த கோப்பை உரியதாகும். எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களை விட விராட் கோலிக்கு தான் இந்த கோப்பை வெல்ல தகுதி உடையவராக இருந்தார். நான் எங்களுடைய ரசிகர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் ஈசாலா கப் நமது.