ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி அபாரமாக செயல்பட்டு பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை 101 ரன்களில் ஆர் சி பி அணி சுருட்டி இருக்கிறது.
இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரஜத் பட்டிதார், "நாங்கள் எங்களுடைய திட்டத்தில் தெளிவாக இருந்தோம். எவ்வாறு பந்து வீச வேண்டும் என்பது குறித்து திட்டம் திட்டி வைத்திருந்தோம். இந்த ஆடுகளத்தை சிறப்பாக எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்."

"குறிப்பாக சுயாஸ் இன்று செயல்பட்ட விதம் அபாரமாக இருந்தது. அவர் தனது லைன் மற்றும் லெங்கத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுயாசின் பலமே ஸ்டெம்பை நோக்கி வீசுவது தான். அவருடைய சில வகை பந்தை பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாது. நான் அவரை போட்டு குழப்பம் செய்ய விரும்ப மாட்டேன்."
"தெளிவான ஐடியாக்களை மட்டுமே நான் அவருக்கு வழங்குவேன். சுயாஷ் பந்து வீசும் போது அதிக ரன்களை கொடுத்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. நாங்கள் இந்த தொடர் முழுவதும் அதிக முறை பயிற்சிகளை செய்திருக்கிறோம். எனவே ஒரு நாள் பயிற்சி செய்யாதது எங்களுக்கு ஒரு பாதிப்பாக தெரியவில்லை. எங்கள் அணியின் வெற்றிக்கு பின் சால்ட் மிகவும் முக்கிய காரணமாக இருக்கிறார்."
"அவர் எங்களுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து வருகிறார். அவருடைய பெரிய ரசிகனாக நான் மாறிவிட்டேன். அவர் விளையாடும் ஷார்ட்டுகளை ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து பார்க்கும்போது ஒரு விருந்து போல் எனக்கு இருக்கும். நான் ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்."
"சின்னசாமி மட்டுமல்ல நாங்கள் எங்கு சென்றாலும் ஆர்சிபி ரசிகர்கள் அதை எங்களது சொந்த மைதானம் போல் மாற்றி விடுவார்கள். உங்களை நான் நேசிக்கின்றேன். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். இன்னும் ஒரு போட்டி தான் இருக்கிறது. அதன் பிறகு நாம் அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்"என்று ரஜத் பட்டிதார் கூறியுள்ளார்.