பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி வந்தது. புள்ளிப் பட்டியலிலும் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி வெற்றிப் பாதையில் இருக்கும் நிலையில், ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு விரலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர் அடுத்து நடைபெற உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது.
ரஜத் படிதார் விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக யார் அந்த அணியின் கேப்டனாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலி மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாகச் செயல்படுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் அது நடக்காது என அந்த அணி வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை ரஜத் படிதார் அடுத்த போட்டியில் விளையாட முடியவில்லை என்றால், விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா தற்காலிக கேப்டனாகச் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, அதில் 16 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இன்னும் ஒரு வெற்றி பெற்றால், பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தான் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மே மாதம் 16ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல் போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதும் போட்டி நடைபெறும் எனவும் பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தற்காலிக ஐபிஎல் நிறுத்தம் ஒரு வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சாதகமாகவும் அமைந்தது.
அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருந்தார். சரியாக அந்த நேரத்தில் தான் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனவே அவர் அடுத்து ஒரு போட்டியில் மட்டுமே விளையாட மாட்டார். அதற்குப் பின் மீண்டும் போட்டிகளில் விளையாடத் தயாராகி விடுவார் என தற்போது கூறப்படுகிறது.