மும்பை: ஆர்சிபி அணி தரப்பில் தன்னை ரீடெய்ன் செய்யாதது ஏன் என்று விளக்கம் அளிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா சீனியர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியுடனான எனது பயணம் முடிவுக்கு வரவில்லை என்று கூறியுள்ள அவர், ஆர்சிபி அணியின் அணுகுமுறை மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்களில் நடக்கவுள்ளது. இதனிடையே ஆர்சிபி அணி தரப்பில் விராட் கோலி, ரஜத் பட்டிதர் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ரூ.83 கோடி பர்ஸ் தொகையுடன் ஆர்சிபி அணி மெகா ஏலத்தை சந்திக்க உள்ளது.

ஆனால் ஆர்சிபி அணியின் சீனியர் வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், டூ பிளசிஸ், முகமது சிராஜ் உள்ளிட்டோர் ரீடெய்ன் செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஆர்சிபி அணி ரீடெய்ன் செய்யாதது குறித்து கிளென் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார். அதில் மேக்ஸ்வெல் பேசுகையில், மோ போபாத்-டம் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஆகியோரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்களுடன் ஷூம் காலில் பேசினேன்.
அப்போது அவர்கள் என்னை ஏன் ரீடெய்ன் செய்யவில்லை என்பது மிகத் தெளிவாக விளக்கினார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பிரியாவிடை கொடுப்பதற்கான நல்ல சந்திப்பாக அமைந்தது. அதன்பின் நாங்கள் மூவரும் கிரிக்கெட் தொடர்பாக 30 நிமிடங்களுக்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டோம். ஆர்சிபி அணியின் திட்டங்கள் என்ன, ஆர்சிபி அணி எதனை நோக்கி பயணிக்கிறது என்பதை ஆலோசித்தோம்.
அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் வெளிநாட்டு வீரர் என்பதோடு, எனக்கான மரியாதையை ஆர்சிபி அணி நிர்வாகம் அளித்திருக்கிறது. இதனை அனைத்து அணிகளும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த சீசனுக்கு முன்பாக சில பயிற்சியாளர்கள் மாற்றம் செய்யப்படுகிறார்கள். அதனால் வீரர்களை தேர்வு செய்வதற்கு முன்பாக, அந்த சிக்கல்களை தீர்க்க முடிவு செய்தனர்.
அதேபோல் ஆர்சிபி அணியின் திட்டங்களை செயல்படுத்த சில காலம் பிடிக்கும் என்று புரிந்து கொண்டேன். ரீடென்ஷன் நாள் நெருங்கும் போது வீரர்களின் மனதில் சில சந்தேகங்கள் வரும். நாம் ரீடெய்ன் செய்யப்படுவோமா என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டே இருக்கும். தற்போது எனக்கு எந்த சந்தேகமும், கவலையும் இல்லை. ஆர்சிபி அணி நிர்வாகம் மிகச்சிறப்பாக சூழலை கையாண்டுள்ளனர்.
விராட் கோலி, ரஜத் பட்டிதர் மற்றும் யாஷ் தயாள் மூவரையும் சுற்றி அணியை கட்டமைக்க திட்டமிட்டுள்ளனர். ஆர்சிபி அணியுடனான பயணம் முடிவுக்கு வந்தது என்று சொல்ல மாட்டேன். நிச்சயம் அந்த அணிக்காக மீண்டும் விளையாட விரும்புகிறேன். ஆர்சிபி அணிக்காக விளையாடிய நாட்களை மறக்க முடியாது. அவ்வளவு கொண்டாட்டமான கிரிக்கெட்டை விளையாடினோம் என்று தெரிவித்துள்ளார்.