பெங்களூரு: 2025 ஐபிஎல் ஏலத்துக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன. ஆனால், அதற்கு முன்பே பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற துலீப் டிராபி போட்டியில் பேட்டிங் செய்ய வந்த கே எல் ராகுலை பார்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். அவர்கள் கூறியதை கேட்டு கே எல் ராகுல் ஒரு நிமிடம் வாயடைத்துப் போனார்.
2024 துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் பெங்களூரு மற்றும் அனந்தபூர் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதிய போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்த கே எல் ராகுல் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது சின்னசாமி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.

"கே எல் ராகுல், கே எல் ராகுல்" என முதலில் கோஷம் எழுப்பினர். பின்னர், "ஆர்சிபி அணியின் கேப்டன் கே எல் ராகுல்" என தொடர்ந்து கோஷமிட்டனர். அதை எதிர்பார்க்காத கே எல் ராகுல் சில வினாடிகள் வாயடைத்துப் போனார். பின்னர் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.
2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் கே எல் ராகுல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து விலகி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர் ஏலத்துக்கு முன்பாகவே அணி மாற்றம் செய்யப்படுவார் எனவும் ஒரு தகவல் உலா வருகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2022 இல் துவங்கப்பட்டது. அப்போது முதல் அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார் கே எல் ராகுல்.
மூன்று ஆண்டுகள் அந்த அணியின் கேப்டனாக இருந்த அவர் தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை நேரில் சந்தித்து விட்டு வந்தார் கே எல் ராகுல். அதன் பின்னர், கே எல் ராகுல் அந்த அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலக உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. கே எல் ராகுல் இந்த ஊகங்கள் குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை.
இதன் இடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ராகுலை தங்கள் அணியின் கேப்டனாக நியமிக்க ஆர்வமாக இருப்பதாக அந்த அணி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியானது. அது உண்மையா? இல்லையா? என்பது தெரியும் முன்பே ஆர்சிபி அணியின் ரசிகர்கள் தங்களின் கேப்டனாக கே எல் ராகுலை ஏற்றுக் கொண்டு விட்டனர்.
அதன் விளைவாகவே துலீப் ட்ராபி போட்டியில் கேஎல் ராகுல் பேட்டிங் செய்ய வந்தபோது அவர்கள் கோஷம் எழுப்பி உள்ளனர். கே எல் ராகுல் அடுத்து நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறார். அதற்காகவே துலீப் டிராபி தொடரில் அவர் பங்கேற்று இருக்கிறார். இந்தியா ஏ அணிக்காக பேட்டிங் செய்த அவர் 111 பந்துகளை சந்தித்து 37 ரன்கள் மட்டும் எடுத்தார். அவரது ஆமை வேக பேட்டிங் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது.