டெல்லி: விராட் கோலியுடன் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் ரன் அவுட் ஆகிவிடுகின்றனர் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சேசிங் செய்தது. அப்போது அந்த அணி மோசமான நிலையில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. விராட் கோலியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் படிதார் பேட்டிங் செய்து வந்தார்.
படிதார் ஆறு பந்துகளை சந்தித்த நிலையில், விராட் கோலியுடன் ஏற்பட்ட குழப்பத்தால் ரன் அவுட் ஆனார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கருண் நாயர் பந்தை ஃபீல்டிங் செய்து வேகமாக வீசினார். விராட் கோலி முதலில் ரன் ஓடி வருமாறு ரஜத் படிதாரை அழைத்தார். ஆனால் கருண் நாயர் பந்தை எடுப்பதைப் பார்த்தவுடன், திரும்பிப் போகுமாறு சைகை காட்டினார்.

படிதார் அதைக் கேட்டு மீண்டும் தனது இடத்திற்கு செல்வதற்குள், டைரக்ட் ஹிட் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார். விராட் கோலி அழைத்ததால்தான் ரஜத் படிதார் ஓடி வந்தார் என்பதால், விராட் கோலிதான் இந்த ரன் அவுட்டிற்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட்டையும் விராட் கோலி ரன் அவுட் செய்திருந்தார். அப்போதும் இதே போன்ற விமர்சனம் எழுந்தது. இதற்கு முன்னர் இந்திய அணியிலும் பலமுறை விராட் கோலியுடன் ஆடிய பேட்ஸ்மேன்கள் ரன் அவுட் ஆகி இருக்கின்றனர். அதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 20 ஓவர்களில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஜத் படிதாரின் ரன் அவுட்டுக்கு காரணமாக சொல்லப்பட்ட விராட் கோலி நிதானமாக விளையாடி 45 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.