மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி குவித்திருக்கிறார்கள். ஐபிஎல் தொடர் பல வீரர்களின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது.
ஏழ்மை நிலையில் இருந்த வீரர்கள் ஒரே இரவில் ஐபிஎல் மூலம் பணக்காரராக மாறி இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத வீரர் ஒருவர் 5550 சதவீதம் சம்பளம் கூடுதலாக வாங்கி இருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா அதிரடி பேட்ஸ்மனாக அறியப்பட்டார்.

ஜித்தேஷ் சர்மா இந்திய அணியில் கடந்த சில போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஜித்தேஷ் சர்மா கடந்த ஐபிஎல் தொடரில் வெறும் 20 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் ஜித்தேஷ் சர்மாவை 11 கோடி ரூபாய் கொடுத்து ஆர் சி பி அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.
ஜித்தேஷ் சர்மா 2023 சீசனில் 21 சிக்ஸரை விளாசி இருக்கிறார். இவருடைய ஐபிஎல் ஸ்ட்ரைக் ரேட் 163, 156 என கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்தது. இதன் மூலம் ஜித்தேஷ சர்மாவுக்கு டி20 அணியின் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் கடந்த சீசனில் ஜிதேஷ் சர்மா துணை கேப்டன் ஆகவும் இருந்தார்.
எனினும் தற்போது அவருடைய பார்ம் முன்பு போல் இல்லை. நடப்பு சீசனில் மொத்தமாகவே அவர் 187 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ஜித்தேஷ் சர்மாவுக்கு அதிக தொகை கொடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் ஆர் சி பி அணியில் தற்போது தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்று இருப்பதால் அவருக்கு பதில் வேறொரு விக்கெட் கீப்பர் தேவைப்படுகிறார்.
அது மட்டும் இல்லாமல் பினிஷர் ஆகவும் இருக்க வேண்டும். ஜித்தேஷ் சர்மா நல்ல திறமை வாய்ந்த வீரர்.ஆனால் தற்போது ஃபார்மில் இல்லை. இதனால் விராட் கோலி ஜித்தேஷ் சர்மாவுக்கு ஊக்கம் கொடுத்து அவரை பழைய அதிரடி வீரராக மாற்றுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதே போல் கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயருக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் இருந்தது. தற்போது மெகா ஏலத்தில் அவரை 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு கே கே ஆர் அணி எடுத்திருக்கிறது.